கேக் சாப்பிட்டதை பேஸ்புக் போஸ்ட் போடுவது கொலை குற்றமா? என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?
பெங்களூர்: ஊடக செய்திகள், அரசியல் தலைவர்கள்-சினிமா உச்ச நட்சத்திரங்களின் பேச்சுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளை கண்ட தமிழகம், முதல்முறையாக, சக பெண்மணியின், பேஸ்புக் போஸ்ட் ஒன்று பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிகழ்வுக்கு சாட்சியாக இருந்துள்ளது.
பெங்களூரில் வசிக்கும் பிரியா குருநாதன் (அதிமுக விசுவாசியாம்) என்பவர் தனது பேஸ்புக்கில் கூறிய கருத்துகள்தான், அடுத்து வரும் வரிகள்:
"யார் வீட்டுக்காச்சும் விருந்தாளியா போனா தயவு செஞ்சு சும்மா போங்க. Just my free advice. ஆர்வகோளாறுல ஸ்வீட் வாங்கிட்டு போறேனு தர்மசங்கடத்துல தள்ளிடாதீங்க.
எங்க வீட்டுக்கு நேத்து ஒருத்தர் வந்தார் கல்யாண பத்திரிகை குடுக்க. வந்தவர் 6 cake வாங்கிட்டு வந்து குடுத்தார். எதுக்கு பணத்தை விரயம் பண்ணனும். என் பொண்ணு ஓபன் பண்ணி பாத்துட்டு நீயே ஆறும் சாப்பிடுனு சிரிச்சிட்டு போய்ட்டா.
Ordinary cake எல்லாம் இப்போ யார் தொண்டைலயும் இறங்கறதில்ல. எங்க வீட்டு ப்ரிஜ்ல எப்பவுமே ஒரு choco truffle or Black forest இருக்கும். அதெல்லாம் பழகி போய் இப்போ வேற எதுவும் திரும்பி பார்க்க முடியரதில்ல.
என் பொண்ணு இன்னும் ஒரு படி மேல. என் பையன் Bangalore la software engineer. அவன ஊருக்கு வானு உயிர எடுத்திடுவா. வரும்போது Red Velvet cake வாங்கிட்டு வரனும் அவன். அது ஒரு small piece Rs 250/- ஒரு கேக்குக்கு அவ்ளோ செலவு பண்ணாதனு பையன திட்டினா, ஆமாம் it's so expensive , mummyku வேண்டாம் எனக்கு மட்டும் வாங்கிட்டு வந்தா போதும்னு சொல்லுவா...
காலம் இப்படி இருக்கு. ஆறு கேக்கும் என் வீட்ல வேலை செய்யும் அம்மணிக்கு பாசமா குடுத்தது தான் மிச்சம்...." என பேஸ்புக் பதிவில், தெரிவித்திருந்தார்.
பிரளயம்
இந்த பேஸ்புக் பதிவுதான் கடந்த வாரம் தமிழ் சோஷியல் மீடியா வட்டாரத்தில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது. பேஸ்புக்கில் அந்த பதிவுக்கே சென்று வசைமாரி பொழிந்தவர்கள் ஒருபக்கம் என்றால், டிவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட பிற சமூக வலைத்தளங்களில், அந்த பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, கேலி, கிண்டல் செய்தவர்கள் மறுபக்கம்.
அரை லட்சம் பேர் தேடல்
அறிமுகம் இல்லாதவர்கள் கூட, பிரியா குருநாதன் என்ற பெயரை சுமார் 55 ஆயிரம் முறை வலைவீசி தேடியதாக பேஸ்புக் புள்ளி விவரம் கூறுகிறது.
புலம்பிய பெண்மணி
ஒரு திரைப்படத்தில், கோலம் போட்டுக் கொண்டிருக்கும் பெண்ணை முகத்தை திருப்பி பார்த்த வடிவேலுவை, ஒரு ஊரே சேர்ந்து விரட்டும். "நான் இப்போ என்ன பண்ணிட்டேன்னு ஊரே சேர்ந்து விரட்டுது" என வடிவேலு புலம்புவார். அதே மனநிலையில்தான் இருந்தார் பிரியா குருநாதன்.
சுதந்திரம் உள்ளதே
மகிழவும், கவலைப்படவும் மட்டுமல்ல, தற்பெருமை பேசவும் சமூக வலைத்தளத்தில் ஒவ்வொருவருக்கும், அவருக்கான வெளி நிச்சயம் உண்டு. அதில் மற்றொருவர் கருத்து கூற எந்த அடிப்படையும் கிடையாது.
பொங்குவதும் பெருமைக்குத்தானே
தன்னை சமூகத்தின் பாதுகாவலர் போல காட்ட வேண்டும், கொடுமையை கண்டு பொங்கி விட்டதாக பிறர் நினைத்து, 'லைக்ஸ்' போட வேண்டும் என்பதற்காகவே, பிரியா குருநாதன் போன்ற ஒரு தனி நபரின், போஸ்டில் மூக்கை நுழைத்து, கிளர்ச்சி செய்தவர்கள், பிரியா குருநாதன் தற்பெருமை பேசிவிட்டதாக, கூறுவதுதான் ஆகப்பெரிய முரண்.
அறச்சீற்றமல்ல, பகட்டு சீற்றம்
அதிகாரத்தில் உள்ளோர் மீது வராத அறச்சீற்றம், சாமானியர்கள் மீது வருகிறதென்றால் அது பொய்ச் சீற்றம், பகட்டு சீற்றம் என்றே கொள்ளப்படும். கேக்கிற்காக பொங்கியவர்களில் பலரும் சுட்டி காட்டுவது அந்த கடைசி வரியைத்தான்.
அந்த ஒரு கேள்வி
இவர் சாப்பிடாத கேக்கை வேலைக்கார பெண்மணிக்கு கொடுத்துவிட்டதாக எப்படி கூறலாம்? என்பதே அந்த சமூக வலைத்தள, சமூக போராளிகளின் முக்கிய கேள்வியாக உள்ளது.
நீங்க எப்படி?
இப்படி கேட்போரில் எத்தனை பேர் ஷாப்பிங் செல்கையில், புது துணி வாங்கி வேலைக்கார பெண்மணியிடம் கொடுத்துவிட்டு, தாங்கள் பழைய ஆடையை உடுத்தியிருப்பார்கள்? எத்தனை பேர் வீட்டில் சுட, சுட சோறு பொங்கி அதை வேலைக்காரர்களுக்கு கொடுத்துவிட்டு, எஞ்சிய சோறை தாங்கள் உண்டிருப்பார்கள்?
ஊருக்கு உபதேசம்
பழசாகிவிட்ட துணி, பழைய சோறு இவற்றையெல்லாம் வாங்குவதற்கென்றே உருவான ஜீவன்கள் போலத்தான் ஏழைகளை பார்த்து பழகிவிட்ட இவர்கள்தான், பிரியா குருநாதன் மட்டும், வெல்வெட் கேக்கை வேலைக்கார அம்மாவிடம் கொடுத்துவிட்டு, சாதாரண கேக்கை சாப்பிட வேண்டும் என்று வக்காலத்து வாங்குபவர்கள்.
சமூகத்தில் உள்ளதே
சமூகத்தில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஜாதி ஏற்றத்தாழ்வைவிட மோசமாக மனிதர்களை பிரித்து வைத்துள்ளது என்பது கண்கூடு.
ஏழை, பணக்காரர் ஏற்றத்தாழ்வு
பணக்காரர்கள் மல்டிபிளக்சுக்கும், ஏழைகள் டென்ட் கொட்டகைக்கும், பணக்காரர்கள் பீட்சா கடைக்கும், ஏழைகள் பரோட்டா கடைக்கும் செல்வதை கண்முன்னே கண்ட பிறகும், அப்படியெல்லாம் ஏற்றத்தாழ்வே கிடையாது என்று கூறி பேஸ்புக்கில் பொங்குவது, பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டிவிட்டது என்று கூறுவதற்கு சமம்.
உங்களிடம் தொடங்குங்களேன்
மாற்றம் தேவையெனில், அதை உங்களிடம் இருந்து ஆரம்பியுங்கள். உங்களின் அதிகார மையங்களில் இருந்து துவங்குங்கள். பிறரின் அந்தரங்க பதிவில் புகுந்து ஆவேசப்பட்டு கூடுதலாக இரண்டு லைக் வாங்குவதோடு சமூக கடமை முடிந்துவிட்டதாக நினைத்துவிடாதீர்கள்.