கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய பேராசிரியர் ஜெயராமனின் தந்தை காலமானார்
தஞ்சாவூர்: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய போராடிய ஜெயராமனின் தந்தை தங்கவேலு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் குடிநீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜெயராமனின் தந்தை தங்கவேலு (97) உடல்நலக்குறைவால் மயிலாடுதுறையில் இன்று காலமானார். தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜெயராமனை விடுவிக்குமாறு அவரது மனைவி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 6வது நாளாக காத்திருப்பு போராட்டம் இன்றும் நீடிக்கிறது. மேலும் கதிராமங்கலத்தில் இருந்து கைதுசெய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்ககோரி அய்யனார் கோவில் திடலில் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.