தமிழர் வரலாற்றை காக்க தேவை கீழடி அருங்காட்சியகம்... ஜி. ராமகிருஷ்ணன் கோரிக்கை
சென்னை: தமிழர்களின் பழமையான வரலாற்றை காக்க கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதற்கு கீழடியில் கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகள் ஒரு உதாரணமாகும். இங்கு உலைக்களம் மட்டுமல்லாது, இரும்பு உருக்குவதற்கான தாதுப்பொருட்களும் கிடைத்துள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2000ஆண்டுகளுக்கு முன்பே உலைக்களம் இருந்தது என்பது தமிழகத்தில் அறிவியல்பூர்வ தொழில்வளர்ச்சிக்கு அடிப்படை இருந்துள்ளது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. சுட்ட செங்கல் மற்றும் சுட்ட ஓடுகளாலான பைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா தொன்மையான வரலாறுடைய நாடு. குறுகிய கால வரலாறுடைய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் விஞ்ஞான வளர்ச்சியில் இந்தியாவைவிட வேகமாக முன்னேறியது எப்படி? ஐரோப்பிய நாடுகளில் மதத்தை அரசியலோடு கலக்க முற்பட்டபோது மதம் மக்களது தனி உரிமை. அரசியல் என்பது வேறு என இரண்டையும் பிரித்து மத ஆதிக்கம் தடுக்கப்பட்டதால் இந்த நாடுகளில் அறிவியல் வேகமாக வளர்ந்து முன்னேறிவிட்டன. ஆனால் 2000 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த இந்தியா பின்தங்கி நிற்பதற்கு காரணம் சாதியும், மதமும் மேலோங்கி ஆதிக்கம் பெறத் தொடங்கியதால்தான். இதுதான் அறிவியல் வளர்ச்சிக்கு தடையாக இருந்திருக்கிறது.
கீழடியில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய 110 ஏக்கர் நிலத்தையும் அரசு பாதுகாக்க வேண்டும். கிடைத்துள்ள பொருட்களை கீழடியிலேயே வைத்துப் பாதுகாத்து அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.