தாள் பதிக்கும் இடமெல்லாம் தடம் பதித்து.. ஜெ.வைப் புகழ்ந்து தள்ளிய செம்மலை
சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கின்ற வகையில் மக்கள் சேவையின் மகத்தான பணிக்கு முழுமையாக நாம் ஒவ்வொருவரும் நம்மை அர்ப்பணித்துப் பணியாற்றுவோம் என தற்காலிக சபாநாயகர் செம்மலை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்ற அதிமுக தமிழகத்தில் ஆட்சியமைத்தது. நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
பின்னர் செம்மலை பேசுகையில், தாள் பதிக்கும் இடமெல்லாம் தடம் பதித்து, வாள் சுழற்றும் களம் யாவும் வாகை சூடி, முறை செய்து காக்கும் முதல்வராய், மக்களை முன்நின்று காக்கும் மூலவராய், தமிழ் மண்ணை இமயத்து தேசத்தில் தலை நாடாக்கி, வையத்தில் இணையில்லா நாடு எம் நாடு எனத் திகழ, நாள்தோறும் வரம் அருளும் முதல்வர் ஜெயலலிதாவை வணங்கி வரவேற்கிறேன்.

அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பாரம்பரியமிக்க தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி.
1984-ம் ஆண்டிற்குப் பிறகு ஆட்சியில் உள்ள கட்சிக்கே மீண்டும் ஆட்சி என்கிற சரித்திர சாதனை, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்.
எளியவனாகிய என்னை வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இருக்கையிலே அமருவதற்கு ஒரு மாபெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிற ஆளுநர் மற்றும் முதல்வருக்கு எனது நன்றி.
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்தை முன் வைத்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உறுதிபூண்டுள்ள, முதல்வரின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கின்ற வகையில் மக்கள் சேவையின் மகத்தான பணிக்கு முழுமையாக நாம் ஒவ்வொருவரும் நம்மை அர்ப்பணித்துப் பணியாற்றுவோம்.
ஒன்று சேருவோம், இணைந்து முன்னேற்றுவோம், உழைத்து வெற்றி பெறுவோம் என்றார் ஹென்றி போர்டு. அதன்படி நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். முதல்வர் ஜெயலலிதா தலைமையின் கீழ் தமிழ்நாட்டை உயர்வடைய செய்வோம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications