சேலத்தில் ஆளுநரின் ஆய்வை எதிர்த்த தி.மு.க, கூட்டணி கட்சியினர் மீது போலீஸ் வழக்கு பதிவு
சேலத்தில் ஆளுநரின் ஆய்வை எதிர்த்த தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சேலம் : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சேலம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டதை எதிர்த்து போராட்டம் நடத்திய தி.மு.க, வி.சி.க.., கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திருப்பூர், கோவை, கடலூர் என மாவட்ட வாரியாக ஆய்வு செய்து வருகிறார். அது போல நேற்று சேலம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த ஆய்வில் பொதுமக்களிடம் குறைகளை கேட்பது, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்வது, அரசு அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபடுவது ஆகியவற்றை செய்து வந்தார்.
இது தமிழக அரசை அவமதிக்கும் செயல் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருக்கும்போது ஆளுநரின் இந்த செயல் மாநில சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று சேலத்திலும் தி.மு.க., வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் ஆளுநரின் வருகையை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திடீரென் போராட்டம் நடத்தினர். இதில் ஆளுநருக்கு கறுப்பு கொடியும் காட்டப்பட்டது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமானவர்கள் மீது அனுமதியில்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுதல் (341), சட்ட விரோதமாக தடுத்தல் (143), தடையை மீறி சட்ட விரோதமாக கூடி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுதல் (188) ஆகிய 3 பிரிவுகளில் சேலம் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications