பேராசிரியர் ஜெயராமனுக்கு ஜாமீன் கிடைத்தாலும் போராட்டம் தொடரும்... கதிராமங்கலம் போராட்டக் குழு
பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேருக்கு ஜாமீன் கிடைத்தபோதிலும் ஓஎன்ஜிசிக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும் என்று கதிராமங்கலம் போராட்டம் குழுவினர் அறிவித்துள்ளனர்.
கும்பகோணம்: கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினாலும் எங்களது போராட்டம் தொடரும் என்ரு கதிராமங்கலம் போராட்டம் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்திருந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் விடுவிக்க கோரி கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் கதிராமங்கலம் எல்லை அய்யனார் கோயில் திடலில் முகாமிட்ட கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் நேற்று 28-ஆவது நாளை அடைந்த நிலையில் ஜெயராமனை தவிர மற்ற 9 பேருக்கு தஞ்சை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பேராசிரியர் ஜெயராமனுக்கு ஜாமீன் வழங்கியது.
இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறுகையில், கைது செய்யப்பட்ட 10 பேரும் விடுவிக்கப்பட்ட போதிலும் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் தொடரும். அந்த நிறுவனம் எங்கள் ஊரை விட்டு வெளியேறும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்த வண்ணம் இருக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications