ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து அலங்காநல்லூரில் கடையடைப்பு
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையைக் கண்டித்து மதுரை அலங்காநல்லூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் மதுரை உள்பட பல பகுதிகளில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு காலம்காலமாக நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இதனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மாடுபிடி வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவையின் அவசர கூட்டம் மதுரையில் நடந்தது. மாநில தலைவர் பி.ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்பட 17 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாலமேட்டில் கடையடைப்பு
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாலமேட்டில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. பாலமேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
வீடுகளில் கறுப்புக் கொடி
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளிலும், கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது.
அலங்காநல்லூரில் கடையடைப்பு
இந்த நிலையில் அலங்கா நல்லூரிலும் இன்று (சனிக் கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அங்குள்ள சுமார் 700-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கிராம பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டியினர் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
மாடுகளுக்கு கறுப்புக் கொடி
ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு 10-க்கும் மேற்பட்ட மாடுகளை நிறுத்திய விழாக் கமிட்டியினர் அதன் கொம்புகளில் கறுப்புக்கொடி கட்டி இருந்தனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உச்சநீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்,
முதல்வருக்கு கோரிக்கை
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சிறப்பாக போராடிய முதல்வர் ஜெயலலிதா ஜல்லிக்கட்டு விஷயத்திலும் முயற்சி எடுத்து தடையை நீக்க வேண்டும் என விழாக்கமிட்டியினர் வலியுறுத்தினர்.
திருமோகூரிலும் கடையடைப்பு
இதேபோல ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி திருமோகூரிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது