அவசர சட்டம் உடனே போடணும்... ஜல்லிக்கட்டு நடந்தால் மட்டுமே கலைவோம் - போராட்டக்காரர்கள் உறுதி
அவசர சட்டம் போடுவோம் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தாலும் நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று போராட்டக்குழுவினர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், காளைகளை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக அலங்காநல்லூரில் இரவு பகலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை, மதுரை, கோவை, நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக மாபெரும் புரட்சி நடைபெற்று வருகிறது. அறவழி போராட்டம் ரயில்மறியலாக மாறியது. இப்போது விமானத்தையே மறிக்க விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
டெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமரை சந்தித்த பின்னர் இன்று காலையில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறியுள்ளார்.
அவசர சட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, மிருகவதை தடை சட்டத்தில், மாநிலம் சார்பில் திருத்தம் செய்யப்பட்டு, வரைவு அவசர சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம்
இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசுத் தலைவர், பிரதமரிடம் ஒப்புதல் பெற்று இந்த சட்டம் பிறப்பிக்கப்படும். மேலும், ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
தொடர்ந்து போராடுவோம்
முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தாலும் இது வெறும் கண்துடைப்பாக மட்டுமே அமைந்து விடக்கூடாது என்று மாணவர்கள் கூறியுள்ளனர். அலங்காநல்லூரில் வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்து விட்டால் மட்டுமே நாங்கள் கலைந்து செல்வோம் என்று மாணவர்களும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையம் முற்றுகை
பஸ் மறியல், சாலை மறியல், ரயில் மறியல் செய்த மாணவர்கள் இப்போது விமானத்தை மறிக்க சென்று விட்டனர். மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் முதல்வரின் அறிவிப்பை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக இல்லை.
முதல்வர் வரட்டும்
ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெற வேண்டும். எத்தனையோ வெற்று அறிவிப்புகள் வந்து விட்டன. அதேபோல இதை நம்பி நாங்கள் களைந்து செல்ல மாட்டோம் என்று மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். முதல்வரும் வரட்டும், வந்து எங்களோடு அமர்ந்து போராட்டம் நடத்தட்டும், ஜல்லிக்கட்டு நடந்த பின்னர் எல்லோரும் எழுந்து செல்வோம் என்று உறுதி பட கூறியுள்ளனர் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து நாட்கள் ஆனாலும் பேச்சில் அனல் குறையாமல் இருக்கிறது. வாடி வாசல் திறந்தால் மட்டுமே வீடு வாசல் செல்வோம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் இளங்காளைகள்.