சாத்தூரில் தற்காலிக ஊழியர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதலால் பதற்றம்
தற்காலிக ஊழியர்களை போக்குவரத்து கழகம் நியமனம் செய்துள்ள நிலையில், அவர்களை பேருந்துகளை இயக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video
விருதுநகர்: பேருந்துகளை இயக்க சென்ற தற்காலிக ஊழியர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று தீவிரமடைந்தது. அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கினர். பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் விருதுநகர் சாத்தூரில் பேருந்துகளை இயக்க முயன்ற தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதேநிலை பல்வேறு மாவட்டங்களில் தொடர்வதால் பேருந்துகளை இயக்க தற்காலிக ஊழியர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தும் அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்ளிட்டோரை மீறி பேருந்துகளை இயக்க தற்காலிக பணியாளர்கள் தயங்குவதாக தெரிகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தொழிற்சங்க நிர்வாகிகள், இது போக்குவரத்து கழகத்தின் பலே திட்டம் எனக் கூறியுள்ளனர். தற்காலிக ஊழியர்களை பலி ஆடு போல பணிக்கு எடுத்து, அவர்களை பேருந்துகளை இயக்கவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெறி ஏற்றிவிடுவது தான் கழகத்தின் திட்டம்.
மேலும் இவ்வாறு ஓட்டும் தற்காலிக ஊழியர்களை ஆத்திரத்தில் போராட்டக்காரர்கள் தாக்கி விட்டால் அதையே காரணம் காட்டி இந்த போராட்டத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாற்றி, போலீசார் துணையுடன் எங்களை அடித்து உதைத்து போராட்டத்தை ஒடுக்குவதற்காக தான் போக்குவரத்து கழகம் இந்த பலே திட்டத்தை தீட்டியுள்ளது என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
யார் பலே திட்டம் தீட்டினாலும், தற்காலிக பணியாளராக வருவது உங்களில் ஒருவன் தான், அவனுக்கும் குடும்பம் இருக்கிறது, அவங்களுக்கும் வயிறு இருக்கிறது என்பதை எண்ணி போராட்டக்காரர்கள் கண்ணியத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணமாக உள்ளது.