தமிழக மீனவர்களுக்கு தூக்கு: தமிழகம் முழுவதும் போராட்டம் வலுக்கிறது – தொடர் உண்ணாவிரதம்
சென்னை: இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதற்கு கண்டணம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 மாவட்ட மீனவர்கள்
நாகை, திருவாரூர், தஞ்சை , புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 6வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
7 வதுநாளக போராட்டம்
5 தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி குமரி மாவட்டம் சின்னமுட்டம் கிராம மீனவர்கள் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கறுப்புக்கொடி ஆர்பாட்டம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்களும், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்களும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக் கொடி ஏந்தியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.10 கோடி வருவாய் இழப்பு
மீனவர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் கிட்டதட்ட 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்பிடி சார்பு தொழில்களான ஐஸ்கட்டி தயாரித்தல், மீன் ஏற்றுமதிக்கு பயன்படும் போக்குவரத்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் இதனால் வேலைஇழந்துள்ளனர்.