பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லீம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சென்னையில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 22 ஆம் ஆண்டு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முஸ்லீம்கள் இந்த நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்கின்றனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முஸ்லீம் அமைப்புகளின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும், குழந்தைகளும் கையில் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர்.
இதேபோல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பாபர் மசூதி இடிப்புத் தினத்தை ஒட்டி நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது ஒரு சிலர் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும், கடலோர காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.