முதல்வர் நாற்காலியை தக்க வைக்க தீபாவளி நாளில் 9 மணிநேர யாகம் நடத்திய நாரயாணசாமி
இடைத் தேர்தலில் வெற்றி பெற முதல்வர் நாற்காலியை தக்க வைக்க தீபாவளி நாளில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 9 மணிநேர யாகம் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் வெற்றி பெறாமல் குறுக்கு வழியில் முதல்வரான நாராயணசாமி, இப்போது நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறவும் எதிரிகளை வீழ்த்தவும், காரியம் ஜெயமாகவும் ஒன்பது மணி நேர யாகத்தை நாராயணசாமி நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே நாராயணாமி முதல்வர் நாற்காலியை தக்க வைக்க முடியும். இடைத்தேர்தலில் எப்படியும் பெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று முழு முயற்சியோடு களமிறங்கியுள்ளார் நாராயணசாமி.
பலமான அதிமுக
நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் நாராயணசாமியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் போட்டியிடுகிறார். அதிமுக, வேட்பாளரை வெற்றி பெற வைக்க தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், சி.வி.சண்முகத்திடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது அதிமுக தலைமை.
மிரட்டிய அதிமுகவினர்
அக்டோபர் 28ஆம் தேதி அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய போகும்போது அமைச்சர்கள் எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், செம்மலை மற்றும் விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்ட எம்.எல்.ஏக்கள் கட்சி நிர்வாகிகள் என பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி நாராயணசாமிக்கு நடுக்கத்தை ஏற்படுத்திவிட்டனர்.
போட்டி கடும் போட்டி
முதல்வர் நாராயணசாமி வாக்காளர்களை கவனிப்பதைவிட, அதிமுக அதிகமாக கவனிக்கத் திட்டமிட்டுள்ளதால், நாராயணசாமி கடுமையாக போராட வேண்டி இருக்குமாம். நாராயணசாமியை வீழ்த்த என்.ஆர். காங்கிரஸ், பாமக என மறைமுகமாக களமிறங்கியிருக்கின்றன. பாஜகவும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது.
ஸ்டாலினை அழைத்த நாராயணசாமி
இந்த நிலையில், எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் இருக்கிறார் முதல்வர் நாராயணசாமி. கடந்த 28ஆம் தேதி திமுக பொருளாளர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்த நாராயணசாமி, தனக்குள்ள நெருக்கடிகளை எடுத்துக்கூறியுள்ளார். தன்னை தோற்கடிக்க செய்யும் சதிகளையும் எடுத்து விளக்கி தனக்காக பிரச்சாரத்துக்கு வரும்படி கோரியிருக்கிறார். அதுபோல கனிமொழியையும் பிரச்சாரத்துக்கு அழைத்திருக்கிறாராம்.
தீபாவளி நாளில் யாகம்
இருவருமே நிச்சயம் பிரச்சாரத்துக்கு வருவதாகக் கூறியிருக்கிறார்கள். இதே உற்சாகத்தோடு புதுச்சேரி திரும்பிய நாராயணசாமி 29ஆம் தேதி காலை தீபாவளி தினத்தன்று எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள தன் வீட்டில் ஒன்பது மணி நேர யாகத்தை நடத்தி முடித்திருக்கிறார்.
எதிரிகளை வெல்வாரா?
எதிரிகளை வீழ்த்த்தி தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியை தக்க வைக்க இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் நாராயணசாமி ஆதரவாளர்கள். தான் செய்த யாகமும், திமுகவும் தன்னை நெல்லித்தோப்பில் காப்பாற்றும் என நம்புகிறார் நாராயணசாமி. முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் நெருக்கடி, ஓம்சக்தி சேகரின் ஆள் பலம், பணபலம் ஆகியவற்றை வென்று வெற்றி வாகை சூடுவாரா நாராயணசாமி.... புதுச்சேரியில் சாமிக்கா? சக்திக்கா மக்கள் ஆதரவு யாருக்கு என்பது 22ம் தேதி தெரியவரும்.