நடக்க முடியாத ஜெயலலிதா... தலைமை செயலகத்தில் உறங்கினார் - புகழேந்தி பரபரப்பு
ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் அவரது உருவம் உருகுலைந்து விட்டது. உயரம் குறைந்துவிட்டது. கடைசி நாளில் போயஸ் தோட்டத்தில் காரில் இருந்துக்கூட அவரால் இறங்க முடியவில்லை என்று புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை: தலைமைச் செயலகத்தில் முக்கியமானவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தன்னையும் மறந்து ஜெயலலிதா உறங்கிவிட்டார் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட பலரும் கூறியதால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்பு போயஸ் கார்டனில் நடந்தது என்ன என்பது குறித்து தினகரன் ஆதரவாளர் புகழேந்தி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
தடுமாறிய ஜெயலலிதா
மெட்ரோ ரயில் விழாவில் பங்கேற்பதற்காக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதியன்று தலைமைச் செயலகம் வந்தார் ஜெயலலிதா. அவரது உருவமே சற்று மாறிப்போய்தான் இருந்தது. மேடையில் மிக மெதுவாக நடந்து வந்தார். ஆனாலும் அவரது குரலில் இருந்த கம்பீரம் குறையவில்லை.
செப்டம்பர் 22ல் அப்பல்லோ
செப்டம்பர் 22ஆம் தேதியன்று இரவு 10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அதன் பின்னர் அவரை மக்கள் சடலமாகத்தான் பார்த்தனர். அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்த தடயமும் இல்லை.
வீடியோ பதிவுகள்
ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி யாருக்குமே தெரியாத மர்மமாகவே உள்ளது. சிசிடிவி பதிவுகள் எதுவுமே இல்லை. போயஸ்கார்டனில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது எப்படி? எந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்ற கேள்விக்கு யாராலும் விடை கூற முடியவில்லை.
ஜெயலலிதாவின் உடல்நிலை
ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கடந்த மாதம் அவரது சிகிச்சை வீடியோ என்ற ஒன்றை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இதுவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் முடிவையே மாற்றியது. இந்த சூழ்நிலையில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் புகழேந்தி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலா வேலுநாச்சியார்
கொலைக்காரி என்ற பட்டத்தை சசிகலாவுக்கு வழங்கினர். ஒருவரை கொல்வதற்கு 33 ஆண்டுகள் தேவையா? சசிகலாவின் உருவத்தில் வேலுநாச்சியாரை பார்க்கிறேன். ஜெயலலிதாவை ஒரு குழந்தை போல பார்த்துக்கொண்டார். ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் அவரது உருவம் உருகுலைந்து விட்டது. உயரம் குறைந்துவிட்டது.
சசிகலாவை பிடித்து நடந்த ஜெ
செப்டம்பர் 21ஆம் தேதியன்று கடைசி நாளில் போயஸ் தோட்டத்தில் காரில் இருந்துக்கூட அவரால் இறங்க முடியவில்லை. சசிகலாவை அழைத்து வரசொன்னார். சசிகலா வந்தவுடன் அவரிடம் ஜெயலலிதா தனது காலை காண்பிக்கிறார்.அவரது ஷூவில் புடவை சுற்றிக்கொண்டிருந்தது. அதைக்கூட அவரால் எடுக்க முடியவில்லை. பின்னர் சசிகலா தோளில் கையை போட்டபடி வீட்டினுள் சென்றார்.
ஜெயலலிதாவின் நிலை
தமிழக மக்கள் மீது கவனத்தை செலுத்திய அவர் தனது உடல்நிலையை கவனிக்க தவறிவிட்டார். இதேபோல், தலைமைச் செயலகத்தில் முக்கியமானவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தன்னையும் மறந்து ஜெயலலிதா உறங்கிவிட்டார். வெற்றிவேல் வெளியிட்ட வீடியோவில் அவர் நன்றாக இருப்பதை மக்கள் பார்த்து விட்டனர் என்றும் கூறியுள்ளார் புகழேந்தி.