ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்க கூடாது.. சொல்கிறார் கிருஷ்ணசாமி
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்பதாக அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை: மத்திய அரசு பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுகளை சொந்த மண்ணில் உற்பத்தி செய்யவிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்பதாக அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நெடுவாசலில் பல கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 16 நாட்களாக நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
மேலும், பல அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று நெடுவாசல் சென்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் போராட்டக்காரர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் அன்னிய செலவாணி குறைய வாய்ப்பு உள்ளது. இந்திய அரசு பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுகளை சொந்த மண்ணில் உற்பத்தி செய்யவிருக்கும் இந்த திட்டத்தை புதிய தமிழகம் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது
இத்திட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிவியல் ரீதியான புரிதலை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்பதற்காகவும், தெளிவுடுத்துவதற்காகவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு ரூ.11 லட்சம் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதனை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தவில்லை என்றார்.