தூர் வாரியதாக பொய்க் கணக்கு - பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு சிறை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே குளத்தில் தூர் வாரியதாக பொய்க் கணக்கு எழுதி பண மோசடி செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருவருக்கு கோர்ட் சிறை தண்டனை விதித்துள்ளது.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அருகே உள்ளது அனந்தன்குளம். இந்த குளத்தை புதுப்பித்து தூர் வாரியதாக பொதுபணித்துறை கணக்கு காட்டியுள்ளது.
குளத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் முன்பு குளம் எப்படி இருந்ததோ அதே மாதிரிதான் தற்போதும் இருக்கிறது. தூர் வாரியதற்கான அறிகுறியே இல்லை. இதுகுறித்து அவர்கள் தமிழக அரசுக்கு புகார் மனுக்களை அனுப்பினர்.
அதில் அனந்தன்குளத்தை தூர் வாராமல் வாரி விட்டதாக அதிகாரிகள் பொய் கணக்கு காட்டியுள்ளதாக குற்றம் சாட்டினர். அதன் பேரில விசாரணை நடத்த குமரி மாவட்ட லஞ்ச ஓழிப்பு துறைக்கு உததரவிடப்பட்டது.
லஞ்ச ஓழிப்பு போலீசாரின் தீவிர விசாரணையில் பொதுமக்கள் கூறியது உண்மைதான். குளத்தை தூர் வாராமல் ரூபாய் 6 லட்சத்து 32 ஆயிரத்து 195ஐ உதவி செயற் பொறியாளர் மரிய அலோசியஸ், உதவி பொறியாளர் சுப்பிரமணியன், ஓப்பந்தகாரர் ராஜகோபால் ஆகியோர் கையாடல் செய்து விட்டதாக தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள் மேற்கண்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை குமரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி முருகையா அவர்களுக்கு பொறியாளர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஓப்பந்தகாரருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.