அதிமுக- திமுகவை அகற்றும் வலிமை.... வைகோ அணியின் "அடேங்கப்பா" 'கால்குலேஷன்'!!
சென்னை: தமிழகத்தில் அதிமுக- திமுகவை அகற்றும் வலிமை தங்களுக்கே இருப்பதாக வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி "வியக்க வைக்கும்" கால்குலேஷனை கூறி ஆச்சரியப்படுத்தி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மும்முரமடையத் தொடங்கியுள்ளன. வழக்கமாக தேர்தல்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையில் இரண்டு கூட்டணிகள் அமையும். இம்முறை இந்த கூட்டணிகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி ஒன்று வைகோ தலைமையில் 3-வது அணியாக களமிறங்கியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணியானது நிச்சயம் அதிமுக மற்றும் திமுக ஆகியவை தலைமையிலான கூட்டணிகளை வீழ்த்தி தேர்தலில் நாங்களே வெல்வோம் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறது.
இந்த கூட்டணியின் நம்பிக்கை கால்குலேஷன் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ம.தி.மு.க.வின் வழக்கறிஞர் அந்தரிதாஸ் கூறியிருந்ததாவது:
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 76 லட்சம் ஓட்டுகளை அதாவது 19% வாக்குகளைப் பெற்றிருந்தது.
இதில் தற்போது பாஜக, பாமக இல்லை.. அவங்களுக்கு 3%, 3% வைத்தாலும் கூட... விஜயகாந்தும் அங்க இப்ப இல்ல... அவரையும் நாங்கள் சேர்த்துக்கொண்டால் தற்போது 12% முதல் 13% வாக்குகள் இருக்கிறது...
த.மா.கா. எங்கள் கூட்டணிக்கு வரும் போது 2% வாக்குகள் கிடைக்கும். ஏனெனில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 60-70%த்தை (வாசன்) அவர் பிரித்துவிட்டார்.
இதில் பாரதிய ஜனதா இல்லாததால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் அதிகம் எங்களுக்கு கிடைக்கும். சிறுபான்மை வாக்குகள் கண்டிப்பாக எங்களை நோக்கி திரும்பும்.
புதிய வாக்காளர்கள் இருக்கிறார்கள்.... அவர்கள் எல்லாம் மாற்றம் வேண்டும் என விரும்புகிறார்கள். அவங்க ஓட்டு நிச்சயமாக வரும்.
தமிழகத்தில் 1 கோடி குடிகாரர்களை இரண்டு ஆட்சிகளும் மாறி மாறி உருவாக்கி இருக்கிறது. அந்த வீடுகளில் இருக்கிற ஒன்றரை லட்சம் பேர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் ஓட்டுகள் எல்லாம் எங்களுக்கு திரும்பும்.
67-ல் எப்படி ஆண்டு மாநிலத்தில் சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மாற்றத்தை உருவாக்கியதோ,
77-ல் தேசிய அளவில் சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்தஸ்தில்லா கட்சிகள் எல்லாம் சேர்ந்து மாற்றத்தைக் கொண்டு வந்ததோ அதுபோல் இம்முறை தமிழகத்தில் மாற்றம் வரும்.
வெறும் கூட்டல் கழித்தல் கணக்குகளை மட்டும் பேசுகிறீர்கள். தேர்தல்களில் கெமிக்கல் ரியாக்ஷன், பெளதிக மாற்றத்தைப் பற்றியோ பேசுவதில்லை..
இது நிறைய தேர்தல்களில் நடைபெற்றதில்லையா? அதற்கான வாய்ப்புகள் ஏன் இல்லை?
எப்படி பெருவெள்ளத்தில் தன்னார்வலர்கள் திரண்டு வந்தது போல தேர்தலின் போது மக்கள் எங்களை நோக்கி அலையாக வருவார்கள்.
இவ்வாறு அந்தரிதாஸ் கூறினார்.