2 ஒரிஜினல் டாக்டர்களை பணியமர்த்தி "மருத்துவமனை" நடத்தி வந்த போலி டாக்டர் ரஜினி குமார்... !
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட தொற்றுக்காய்ச்சலின் பாதிப்புகளை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு உரிய மருத்துவம் தராததும் இறப்புக்கு காரணமாகிறது.
இந்த நிலையில் போலி டாக்டர்களை வேட்டையாடும் வேலையில் போலீஸார் இறங்கியுள்ளனர். கம்பவுண்டர், டாக்டரின் உதவியாளர் போன்றோர் தன்னிச்சையாக மருந்து கொடுப்பதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வேட்டையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடையநல்லூர் பரசுராமன் தெருவை சேர்ந்த செய்யது புகாரி மகன் ஜலாலுதீன் 40. இவர் ஒரு லேப் டெக்னீஷியன். வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்துள்ளார். இவர் குறித்து தென்காசி அரசு தலைமை மருத்துவர் முகைதீன் அகமது அளித்த புகாரின் பேரில் போலீசார் ஜலாலுதீனை கைது செய்தனர்.
இதே போல் புளியங்குடி முள்ளிக்குளத்தில் பிளஸ் 2 மட்டுமே படித்த லீலா அம்பாள் தாமஸ் என்பவர் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக பார்ப்பதாக வந்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி தாளமுத்து நகரில் ரஜினி குமார் என்பவர் மருத்துவம் படிக்காமல் மருத்துவமனை நடத்தி வந்தது தெரிய வந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். என்ன கொடுமை என்றால் இந்த ரஜினி குமார் நடத்திய "மருத்துவமனையில்" எம்.பி.பி.எஸ்.படித்த 2 பேர் மருத்துவராக பணிபுரிந்து வந்தனர் என்பதுதான்.