சிகிச்சைக்காக டெல்லி செல்ல முடியாமல் தவிக்கும் மூத்த காங். தலைவர் பொன்னம்மாள் - ராகுல் வருத்தம்
திண்டுக்கல்: தமிழகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பொன்னம்மாள் சிகிச்சைக்காக டெல்லி செல்ல முடியாமல் தவித்து வருவது குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் அழகம்பட்டியை சேர்ந்தவர் ஏ.எஸ்.பொன்னம்மாள். தமிழக சட்டமன்றத்திற்கு ஏழு முறை தேர்தெடுக்கப்பட்டவர். 88 வயதை கடந்த பொன்னம்மாள் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமணையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து சிகிச்சைக்காக டெல்லி வரும்படி அழைத்தார்.
இந்நிலையில் முதல் கட்ட சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பொன்னம்மாவிற்கு மீண்டும் உடல்நிலை மோசமானது அவர் வத்தலகுண்டு லியோனார்டு மருத்துவமனையில் அவசர தீவிர பிரிவில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை அளித்த மருத்துவ அதிகாரி ஜாக்குலின் தீவிரமான புற்று நோய் மற்றும் முதுகில் காயம் சர்க்கரை நோயால் கடுமையாக பாதிக்கபட்டுள்ளார். உடல்நிலை சிக்கலான காலகட்டத்தில் உள்ளது என தெரிவித்தார். பொன்னமாவின் பேத்தியும் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவியுமான ஏ.எஸ்.பி ஜான்சிராணி உடனிருந்து கவனித்து வருகிறார்.
மருத்துவமனையில் திமுக மாநில துணைபொதுசெயலாளார் ஐ.பெரியசாமி, மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பொன்னமாவைப் பார்க்க வந்தார். அவர் இதுகுறித்து, "பொன்னம்மாள் தனது எம்.எல்.ஏவிற்கான மருத்துவ சலுகையை கூட அவர் ஏற்றதில்லை.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து, பொன்னம்மாவின் உடல்நிலை குறித்து கேட்டு அறிவதாகவும் தற்போது அவர் வேண்டுதலின்படி பார்க்க வந்ததாகவும், மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு அவர் விரும்பியபோதும் பொன்னம்மாவின் உடல்நிலை பயணம் செய்வதற்கு ஏதுவாக இல்லாததால் சிகிச்சைக்கு டெல்லி கொண்டு செல்லமுடியவில்லை. இதுகுறித்து ராகுல்காந்தி வருத்தம் அடைந்தார்" எனவும் தெரிவித்தார்.