பாஜகவை போல் கழற்றிவிடமாட்டோம்... திமுக கூட்டணிக்கு வாங்க.. விஜயகாந்த்துக்கு அழைப்பு விடுத்த ராகுல்
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக சேரவேண்டும்; இந்த கூட்டணி அடுத்த லோக்சபா தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்று விஜயகாந்த்திடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிக தனித்துப் போட்டி; தனி அணி என அறிவித்ததால் அக்கட்சி திமுக- காங்கிரஸ் கூட்டணி இடம்பெறாது என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் மக்கள் நலக் கூட்டணி, பாஜக ஆகியவை தேமுதிக தங்களது அணிக்கு வரும் என ஒருவித நம்பிக்கையோடு காத்திருக்கின்றன.
இந்நிலையில் விஜயகாந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராகுல் காந்தி பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, திமுக- காங். கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
அத்துடன் அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்; அந்த தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக நீடிக்க வேண்டும்; நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சி கழற்றிவிட்டதைப் போல நாங்கள் செய்யமாட்டோம் என ராகுல் உறுதியளித்திருக்கிறார்.
இதேபோல் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடமும் ராகுல் காந்தி பேசியிருக்கிறார். மேலும் இருவரும் டெல்லி வந்து தம்மை சந்திக்குமாறும் ராகுல் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் இருவரும் எந்த ஒரு உத்தரவாதமான முடிவையும் ராகுலிடம் தெரிவிக்கவில்லையாம்.
இதனால் தேமுதிக தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.