ராகுல் வருகை பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது... திருமாவளவன்
சென்னை: சுப்பிரமணியன் சாமி, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது, பாஜக, அதிமுக ஆட்சியைக் கலைக்க முயற்சிக்கிறதோ, பாஜகவின் பினாமி அரசை இங்கே உருவாக்க முயல்கின்றனரா என்ற சந்தேகத்தை கிளப்புவதாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தது பல விவாதங்களைக் கிளப்பியிருந்தாலும் கூட அது ஒரு மனிதாபிமான செயல் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராகுல் வருகை
ராகுல்காந்தியின் இந்த சந்திப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக சுப்பிரமணியசாமி ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததும், பா.ஜனதா, அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முயற்சிக்கிறது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
பாஜக மீது சந்தேகம்
அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தவும், பா.ஜ.க.வின் ஒரு பினாமி அரசை இங்கே உருவாக்கவும் சதித்திட்டம் தீட்டுகிறதோ என்கிற சந்தேகத்தையும் உருவாக்கி உள்ளது. இரு வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வரை நேரிலே சந்திக்க சுப்பிரமணியசாமியோ, அல்லது பிரதமர் மோடியோ முயற்சிக்கவில்லை. ஆனால் முதல்வர் உடல்நிலையை பயன்படுத்தி இங்கு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பா.ஜனதா முயற்சிக்கிறது.
ஆதாயம் தேட முயலுகிறது பாஜக
முதல்வரின் உடல் நிலையை வைத்து அரசியல் ஆதாயம் தேட விரும்புவது பா.ஜனதாதான் என்பதை உணர முடிகிறது. இந்த நிலையில்தான் ராகுல்காந்தியின் திடீர் சந்திப்பு நிகழ்ந்து இருக்கிறது. எனவே பா.ஜனதாவின் சதி முயற்சியை முறியடிக்கிற வகையில் ராகுல்காந்தியின் பயணம் அமைந்திருக்கிறது என்று விவாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருடைய சந்திப்பு முற்றிலும் மனித நேயத்தின் அடிப்படையிலான சந்திப்பு என்றே நான் நம்புகின்றேன். ராகுல்காந்தி செய்தியாளர்களின் சந்திப்பின் போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரசின் ஆதரவையும், வாழ்த்துக்களையும் கூறி இருக்கிறார்.
ராகுல் காந்தியின் ஆதரவு பேச்சு முக்கியமானது
வாழ்த்துக்கள் என்று மட்டும் கூறாமல் ஆதரவையும் தருகிறோம் என்று சொல்லி இருப்பதால் ஆட்சியை கலைக்க விடாமல் செய்யும் என்று அரசியல் ரீதியாகவே அவர் கூறியிருக்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதே வேளையில் தமிழகத்தில் தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி உள்ள நிலையில் ராகுல்காந்தியின் பதில் பல்வேறு யூகங்களுக்கு இடம் அளிக்கிறது.
மனிதாபிமான சந்திப்பு
தி.மு.க. தலைவர் கலைஞரை சந்திக்காமல் உடனடியாக அவர் டெல்லிக்கு சென்றதும் இவ்வாறான சந்தேகங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. ஆனால் டெல்லியைப் பொறுத்தவரையில் கூட்டணி அரசியலை தாண்டி இப்படிப்பட்ட மனிதாபிமான சந்திப்புகள் அடிக்கடி நிகழ்வது உண்டு. தமிழ்நாட்டில் மட்டும்தான் எல்லாவற்றையுமே கூட்டணி அரசியலோடு இணைத்து பார்க்கிற ஒரு கலாச்சாரம் வளர்ந்துள்ளது. எனவே முதல்வரின் உடல் நலத்தின் மீதுள்ள அக்கறையின் அடிப்படையில் ராகுல்காந்தி மனிதாபிமானத்தோடு இந்த சந்திப்பை மேற்கொண்டார் என்று நம்புவோம் என்று அவர் கூறியுள்ளார்.