கன மழை.. முழங்கால் அளவு ஓடிய வெள்ளம்.. சென்னையில் ஸ்தம்பித்த போக்குவரத்து
சென்னை: கன மழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று பல சென்னைவாசிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பி வழக்கமான அலுவல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு மேல் கன மழை பெய்தது. இந்த மழை காரணமாக டிராபிக் நெரிசல் ஏற்பட்டதால் பல இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

அடையாறு முதல் கிண்டி வரையிலான மத்திய கைலாஷ் உள்ளிட்ட பகுதிகள், குரோம்பேட்டை, ஈக்காடுந்தாங்கல், ராமாபுரம், ஆலந்தூர்-மீனம்பாக்கம் மார்க்கம், திருவான்மியூர்-மத்திய கைலாஷ் மார்க்கம், சாந்தோம், பட்டினம்பாக்கம், வண்ணார்ப்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஆழ்வார்பேட்டை மெளபரீஸ் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது. மயிலாப்பூர் பி.எஸ். சிவசாமி சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வழி நெடுகிலும் 2 அடி வரை தண்ணீர் தேங்கியது.
ராதா கிருஷ்ணன் சாலையிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கமிஷனர் அலுவலகம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து முழங்கால் அளவு தண்ணீர் சாலையில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். சுமார் 2 மணி நேரம் கழித்து மழை நின்றது. இதன்பிறகு இரவு 10 மணிக்கு மேல் படிப்படியாக நிலைமை சீரடைந்தது












Click it and Unblock the Notifications