மக்களே.. 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.. ஆனால், சின்னதாக மழையும் பெய்யுமாம்...!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு லேசாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: கோடை காலம் போல கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு லேசாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பருவமழை பொய்த்துப்போய் வறட்சி தாண்டவமாடும் நிலையில் பிப்ரவரியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் மார்ச் முதல் மே மாதம் வரை வெயில் கொளுத்தும் என்றும் சராசரி அளவை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆண்டுதோறும் மார்ச்சுக்கு மேல்தான் வெப்பம் அதிகமாக காணப்படும். இந்த ஆண்டு ஜனவரியிலேயே தொடங்கி விட்டது. 1901 ம் ஆண்டிற்கு பிறகு 8 வது முறையாக இந்த ஆண்டு ஜனவரியில் வெயிலின் தாக்கம் உயர்ந்துள்ளது. நடப்பாண்டு ஜனவரியில் அதிகபட்சமாக 0.67 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வெப்பம்
இந்த ஆண்டு வடமேற்குப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சராசரி அளவை விட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்படும். மார்ச் முதல் மே மாத வரையிலான கோடையில் பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்.
ஆந்திரா கடலோர மாவட்டங்கள்
மேற்குவங்கம், ஒடிசா, தெலுங்கானா, மத்திய மகாராஷ்டிரா, ஆந்திராவின் கடலோர பகுதிகளில் உச்சபட்ச வெப்பம் காணப்படும். அனல் காற்றின் வேகமும் அதிகமாக காணப்படும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெயில்
இந்த நிலையில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் சென்னையை பொறுத்தவரை வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
லேசான மழை
தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் லட்சத்தீவு முதல் கர்நாடகம் வரை காற்றின் மேலடுக்கில் சாதகமான சூழல் உருவாகியுள்ளதன் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தமிழகத்தில் எந்த இடத்திலும் மழை பதிவாகவில்லை.
தென் தமிழகத்தில் மழை
இதனிடையே காற்றில் உருவாகியிருந்த சாதகமான சூழலானது, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. காற்றழுத்தத் தாழ்வுநிலை தற்போது சற்று நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலின் அருகில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். இந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெறாது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.