நீரில் மிதக்கும் சென்னை புறநகர்கள்- வீடுகளுக்குள் தண்ணீர், தவிக்கும் மக்கள் அவதி!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, துரைப்பாக்கம், மேடவாக்கம், புழுதிவாக்கம், வேளச்சேரி, கொட்டிவாக்கம், கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வருகின்ற பலத்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
இந்த பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நின்ற மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2 தினங்களாக அந்த மரம் அங்கேயே கிடப்பதாகவும், அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இதைப்போல ஆதம்பாக்கம் பகுதியில் பெய்த பலத்த மழையால், அங்குள்ள போலீஸ் நிலையத்தில் மழைநீர் புகுந்தது. கடந்த 2 நாட்களாக தேங்கியிருந்த இந்த தண்ணீர் மோட்டார் மூலம் நேற்று வெளியேற்றப்பட்டது. எனினும் இந்த மழை நீரால் போலீஸ் நிலையத்தில் இருந்த ஆவணங்கள் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.