சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி வெயில் காலத்தில் பரவாயில்லாமல் இருந்த வெயில் தாக்கம், ஜூன் முதல் அதிகரித்தது. இருப்பினும் இந்த மாதம் தொடங்கியதில் இருந்து அவ்வப்போது வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைபெய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து, மாலை நேரங்களில் மழை பெய்கிறது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த மாதம் தொடக்கத்தில் அதிகபட்ச வெயில்(105 டிகிரி) பதிவானது. ஆனால் நேற்று 98.6 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் அளவு இன்னும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லார், திருவள்ளூர் மாவட்டம் செம்பரப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவலா, காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகம், பொள்ளாச்சி, சென்னை மீனம்பாக்கம், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்றும் பல இடங்களில் மழை பதிவாகியுள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பியுள்ளனர்.