கடலூரில் சிக்கிய அஷ்ரப் அலியை 5 நாள் காவலில் எடுத்தது ராஜஸ்தான் போலீஸ்
சிதம்பரம்: கடலூரில் சிக்கிய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி அஷ்ரப் அலியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ராஜஸ்தான் பயங்கரவாத தடுப்பு போலீசார் அனுமதி பெற்றுள்ளனர்.
சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் குண்டுகள் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பதுங்கி இருந்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி அஷ்ரப் அலி கூட்டாளியுடன் சிக்கினார்.
சிக்கிய அஷ்ரப் அலி, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் தேடப்பட்டவர் என்பது தெரியவந்தது. பின்னர் அஷ்ரப் அலியை கடலூரை அடுத்த தூக்கனாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அவரிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால் விசாரணையில் அவருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது. அஷ்ரப் அலியை ராஜஸ்தானுக்கு கொண்டு செல்ல அம் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் கடலூரில் முகாமிட்டிருந்தனர்.
பின்னர் நேற்று கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஷ்ரப் அலியை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது தீவிரவாதி அஷ்ரப் அலிக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பித்து இருப்பதால் அவரை ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்வதற்கு அனுமதி வழங்கக்கோரி நீதிபதியிடம் ராஜஸ்தான் போலீசார் மனு கொடுத்தனர்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்டு அஷ்ரப் அலியை 5 நாட்களுக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். இதை அடுத்து தீவிரவாதி அஷ்ரப் அலியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் ஜோத்பூருக்கு அழைத்து செல்லப்பட்டார்.
யார் இந்த அஷ்ரப்? தமிழகம் வந்தது எப்படி?
கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஷ்ரப் அலி பற்றி ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி புஷ்பேந்திரசிங் ரத்தோர் கூறியதாவது:
இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்குவது தான் தீவிரவாதி அஷ்ரப் அலியின் வேலை. ஜோத்பூரில் பல்வேறு இடங்களில் இதுபோன்று இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார்.
இதுபோன்று ஆலோசனை வழங்கும் அமைப்புக்கு அவர் தலைவராக இருந்துள்ளார். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரியாஷ் பட்டேலுக்கும் அஷ்ரப் அலிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ரியாஷ் பட்டேல் சொல்வதைத்தான் அஷ்ரப் அலி செய்வது வழக்கும். போலியான முகவரி கொடுத்து இவர்கள் செல்போன்களை பயன்படுத்தி இருப்பதை கண்டுபிடித்தோம். அந்த செல்போன் சிம்கார்டுகளை வைத்து ரியாஷ் பட்டேலுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதை அறிந்து கொண்டோம்.
தமிழகத்தில் மதபோதனை செய்வதற்காக டெல்லியில் இருந்து ஒரு குழுவினர் கடந்த ஏப்ரல் 2-ந் தேதி தமிழகம் வந்தனர். அந்த குழுவில் அஷ்ரப் அலியும் இணைந்து கொண்டார்.
இதையடுத்து அஷ்ரப் அலியை பிடிப்பதற்காக நாங்கள் தமிழ்நாட்டு போலீஸ் உதவியை நாடினோம். தமிழக போலீசார் அஷ்ரப் அலியை பொறி வைத்து பிடித்துள்ளனர். அஷ்ரப் அலியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.