கபாலி டிக்கெட்டில் கொள்ளை: நடவடிக்கை கோரி சேலம் கலெக்டரிடம் ரசிகர்கள் புகார்
சென்னை: ரஜினி நடிப்பில் உருவாக்கி வெளியாகவுள்ள கபாலி படத்தின் டிக்கெட் கட்டணத்தில் முறைகேடு நடப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியரிடம் ரஜினி ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கபாலி. இந்தப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ஜூலை 22ம் தேதி வெளியாகிறது. கோச்சடையான், லிங்கா படத்திற்கு செய்யாத அளவிற்கு அதிக அளவில் புரமோசன்கள், விளம்பரங்கள் இந்த படத்திற்கு செய்யப்பட்டு வருகின்றன.
டிவியில் 5 ஸ்டார் சாக்லேட் சாப்பிடும் மறதி பாய்ஸ் முதல் குட்டி சுட்டி வாண்டூஸ் வரை மகிழ்ச்சி என்ற தமிழ் வார்த்தையை அழகாக உச்சரிக்கின்றனர். ரஜினி புண்ணியத்தில் இனி 'சந்தோசம்' என்ற வார்த்தை மெல்ல மறைந்து விடும் 'மகிழ்ச்சி' என்ற வார்த்தையை அழகாய் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
கபாலி டிக்கெட்
22ம் தேதி வெளியாகும் படத்திற்கான டிக்கெட்டுகள் கடந்த 16ம் தேதி நள்ளிரவு முதல் விற்பனை தொடங்கியது. ஒரு வாரத்திற்கு டிக்கெட் இல்லை என்கின்றனர். கட்டணத்தை கேட்டால் தலை சுற்றுகிறது. திருப்பதி வெங்கடாசலபதியை பார்க்க விரைவு தரிசனமே 300 ரூபாய்தான்.... ஆனால் கபாலியை பார்க்க ரூ.1000 தரணுமா என்று சமூக வலைத்தளங்களில் கேட்கின்றனர் பல ரசிகர்கள்.
தியேட்டர்கள் கொள்ளை
சேலம் மாநகர் மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்ற நிர்வாகிகள், சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த புகார் மனுவில், ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் வருகிற 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில், திரையரங்கில் அரசு நிர்ணயித்த ரூ.120யை விட கூடுதல் விலையாக ரூ.260க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதிகாலையில் திரைப்படம்
தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து இதனை செய்து வருகின்றனர். இதனால் பொது மக்கள் படம் பார்க்கும் வாய்ப்பு குறைந்து விடும். இதனுடன் விதிமுறைகளுக்கு மாறாக அதிகாலை 4 மணிக்கு படத்தை திரையிட முயற்சி நடந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தியேட்டர்கள் முற்றுகை
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஜான் மணி மாறன் கூறுகையில், கபாலி படத்தின் டிக்கெட் ரூ.300, 400க்கு தற்போதே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால், ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து அனைத்து திரையரங்கையும் முற்றுகையிடுவோம் என தெரிவித்தார்.
வரிச்சலுகை பெற்ற படம்
கபாலி படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு வரிச்சலுகை நிச்சயம் கிடைக்கும் என்றாலும் கட்டணக் கொள்ளையடிக்கின்றன தியேட்டர்கள். தீபாவளிக்கு வெளியான படங்களில் அஜித் நடித்திருந்த ‘வேதாளம்' படத்துக்குக் கேளிக்கை வரிவிலக்கு சலுகையை தமிழக அரசு அளித்திருந்தது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
நீதிமன்ற உத்தரவுப்படி வரிவிலக்கு போக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து திரையரங்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கம்போலவே வரித் தொகையையும் சேர்த்தே சென்னை போன்ற மாநகரங்களில் உள்ள தியேட்டர்களில் முழுமையாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது என்பது ரசிகர்களின் குமுறலாகும்.
தொடரும் கட்டணக்கொள்ளை
வழக்கமாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது மட்டுமல்ல பல திரையரங்குகளில் படம் வெளியாகும் முதல் தினத்தில் சிறப்புக் காட்சிகள் என்ற பெயரில் 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை பிளாட் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், இது பெரிய கதாநாயகர்களின் படங்களுக்கு தொடர்வதாகவும் சொல்கிறார்கள் ரசிகர்கள். ரஜினி படத்திற்கு இதற்கு முடிவு கட்டப்படுமா என்பது சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.