தலைவா நீங்கதான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்... தெறிக்கவிட்ட ரசிகர்கள்
தமிழக அரசியலில் ஜெயலலிதா இறந்தபிறகு பல்வேறு மாற்றங்கள் நிலவி வரும் நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து நிரந்தர முதல்வராக திகழ வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.
சென்னை: போர் வரும் போது பார்த்து கொள்ளலாம் என்ற நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கருத்தை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
கடந்த 21 ஆண்டுகளாக ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். எனினும் அவர் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது கடந்த 5 நாள்களாக ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக சில கருத்துகளை தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது ரசிகர்கள் தெரிவிக்கையில் ரஜினியை நீண்ட நாள்களுக்கு பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளோம். தமிழகத்தில் நடந்து வருவதை உன்னிப்பாக கவனித்து வந்தார். பொறுத்து பொறுத்து பார்த்தார். இன்று பொங்கி எழுந்துவிட்டார். முடிவு பண்ணிட்டார். இனி அவருதான் எல்லாமே. அரசியலுக்கு வந்தால் நிரந்தர முதல்வராக இருப்பார் என்றனர் ரசிகர்கள்.
கோடம்பாக்கம் திருமண மண்டபத்தில் கடைசி நாளான நேற்று ரஜினி பேசுகையில், முதல் நாள் நிகழ்ச்சியில் சிலவற்றை பேசினேன். அது இந்தளவுக்கு சர்ச்சையாகும் என்று நினைக்கவில்லை. இன்னும் பேசிக் கொண்டிருந்தால் அது மேலும் சர்ச்சையாகிவிடும் என்பதால் ஊடக நண்பர்களையும் நான் சந்திக்க முடிவதில்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.
மேலும் ராஜாக்களிடம் படை பலம் இருக்கும், பெரிய அளவில் இருக்காது. ஆனால் போர் வரும் எல்லா ஆண்களும் சேர்ந்து போரிடுவர். அதுவரை அவரவருக்கான வேலைகளை, கடமைகளை செய்து கொண்டிருப்பார்கள். எனக்கும் கடமை இருக்கிறது. நீங்கள் ஊருக்கு புறப்படுங்கள், உங்கள் கடமையை செய்யுங்கள். போர் வரும்போது பாத்துக்கலாம். ஆண்டவன் இருக்கிறான் என்றும் ரஜினி தெரிவித்தார்.