கட்சியை வலுப்படுத்த வேண்டுமானால் முதலில் இதை பண்ணுங்க.. ரஜினி கட்டளை
தமிழகத்தில் உள்ள தனது ரசிகர் மன்றங்களை அதிகரிக்க அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என தனது ரசிகர்களுக்கு ரஜினி கட்டளையிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: தனிக்கட்சி தொடங்குவேன் என்ற ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அனைவரும் திக்குமுக்காடி போய் உள்ளனர். கைத்தட்டி, விசிலடித்து ஆரவாரம் செய்த ரசிகர்கள் தாங்கள் தேர்தலில் நின்று ஆட்சியை பிடித்து விட்டது போல தங்கள் உற்சாகத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார், பயப்படுவார், முடிவெடுக்க மாட்டார் உள்ளிட்ட பல கேலி கிண்டலுக்கு நடுவில், நான் அரசியலுக்கு வருவேன், தனிக்கட்சி தொடங்குவேன் என்று அவருடைய ஸ்டைலில் ரசிகர் முன்னிலையில் ரஜினிகாந்த் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அவர் தமிழக அரசியல் குறித்தும், தன்னுடைய அதிருப்தி குறித்தும் விரிவாக பேசினார். சட்டமன்ற தேர்தல் வரும்போது நாம் அரசியல் பற்றி பேசலாம் அதுவரை அரசியலை பேசாதீர்கள் என்று ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த ரஜினி, கட்சித் தலைவர்களையும் விமர்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
தனிக்கட்சி பற்றி அப்புறம் பார்த்துக்கொள்ளலாம், முதலில் ரசிகர் மன்றத்தை அதிகரியுங்கள், தமிழகம் முழுவதும் தற்போது பதிவு செய்த மன்றங்களை விட பதிவு செய்யாத மன்றங்களை பல ஆயிரங்கள் இருக்கிறது. அவற்றை எல்லாம் முதலில் பதிவு செய்யுங்கள், பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் மன்றத்தில் உறுப்பினராக்குங்கள் என்றார்.
தனக்கு தொண்டர்கள் வேண்டாம் காவலர்கள் வேண்டும் என்று கூறிய அவர், கட்சியில் எண்ணிக்கை முக்கியம் என்ற கண்ணோட்டத்திலே மன்றத்தை அதிகரிக்கவும் ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது. கட்சி தொடங்கப்பட்டால், கண்டிப்பாக கட்சி நிர்வாகி பதவி கிடைக்கும் என்ற உத்வேகத்தில் ரசிகர்களும் சிட்டாக பறந்து ரஜினியின் உத்தரவை நிறைவேற்றுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
காலா, 2.0 உள்ளிட்ட படங்கள் ரிலீசிற்கு தயாராகி வரும் நிலையில் தான், ரஜினி இந்த மாஸ்டர் பிளானை போட்டுள்ளதாகவும் விமர்சகர்கள் தங்கள் கருத்தை முன்வைத்துள்ளனர். தனிக்கட்சி எப்போது தொடங்கப்படும் என்று கூறாத நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மழுப்பிய நிலையில், ரசிகர் மன்றத்தை அதிகரிக்கப்படுத்த மட்டும் அவர் உத்தரவிட்டுள்ளது ஏன் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எதுவாக இருந்தாலும் "குமுதா ஹேப்பி அண்ணாச்சி..." என்பதைப் போல ரஜினியின் இந்த அறிவிப்பால் "ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி...."