ரஜினி அறிவிப்பு: ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.. ஆனால் பொதுமக்கள்?
ரஜினியின் அரசியல் அறிவிப்பு பொதுமக்களிடையே பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தாமல் போய் உள்ளது.
Recommended Video
சென்னை: ரஜினியின் அரசியல் அறிவிப்பை அவரது ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். மேலும் உலகம் முழுக்க அவருக்கு ஆதரவாக பலரும் எழுதி வருகின்றனர்.
அரசியல் தலைவர்களும் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளனர். ஆனால் பொதுமக்கள் பலர் இந்த அறிவிப்பால் எந்த வித பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை என்பது போல தெரிகிறது.
பொதுமக்களை தன் பக்கம் இழுக்க ரஜினி இன்னும் நிறைய திட்டங்கள் வைத்து இருப்பது அவர் அரசியல் பேச்சின் மூலம் தெரியவந்து இருக்கிறது. தன்னுடைய பேச்சிலேயே அதற்கான திட்டங்களையும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
ரசிகர்கள்
ரஜினியின் அரசியல் அறிவிப்பை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால் பொது மக்களை இது பெரிய அளவில் கவரவில்லை. பேஸ்புக்கிலும் டிவிட்டரில் அவரது அரசியல் அறிவிப்பை கிண்டல் செய்தும் சிலர் எழுதி வருகின்றனர்.
மக்களுக்கான கட்சி
இப்படி கிண்டல் செய்பவர்களின் மனதை மாற்ற ரஜினி சில திட்டங்கள் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. மக்களிடம் தன்னுடைய அரசியல் திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு செல்ல அவர் முடிவு எடுத்து இருக்கிறார். இதற்காக இன்னும் மூன்று வருடங்கள் தன்னுடைய ரசிகர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
பெண்கள்
இதன் முதல்படியாக தன்னுடைய அரசியல் கட்சியில் நிறைய பெண்களை இணைக்க முடிவு செய்துள்ளார். ஒருகாலத்தில் ரஜினியின் ஸ்டைலுக்கு நிறைய பெண் ரசிகர்கள் இருந்தார்கள். அந்த பெண் ரசிகர்களும், இப்போது இருக்கும் இளம் பெண்களும் தன்னுடைய ரசிகர் மன்றத்தில் இருக்க வேண்டும் என ரஜினி விரும்புகிறார். வெறும் ஆண்களுக்கான கட்சியாக தனது கட்சி இருக்க கூடாது என்று அவர் நினைக்கிறார்.
அனைத்து தரப்பும்
அதேபோல் தன்னுடைய கட்சி கிராமங்கள், நகரங்கள் என இரண்டு இடத்திலும் சரியான அளவு பிரபலம் ஆக வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். சட்ட மன்ற தேர்தல் வரை இதற்கான முன்னெடுப்புகளையும், வேலைகளையும் செய்யவே அவர் முடிவு செய்து இருக்கிறார் என்பது அவர் அரசியல் பேச்சில் இருந்து தெரியவந்து இருக்கிறது.