ஆகவே ஜனங்களே, மக்களே, அன்பான வாக்காளப் பெருமக்களே.. அம்பு எய்ய ரெடியாயிட்டாராம் ரஜினி!
சென்னை: ரஜினிகாந்த் அடுத்த மாதம் அரசியல் கட்சியை தொடங்குகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்தை கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வர வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், ஊழலில்லாத ஆட்சியை தர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்பினர். எனினும் ரஜினி அரசியலை விட்டு தள்ளியே இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்தார். அதற்கடுத்த நாளே ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார்.
கட்சி தொடக்கம்
முதல் நாள் அறிவிப்பு , அடுத்த நாள் இணையதளத்தில் அமைப்பு தொடக்கம் என்ற வேகத்தில் ரஜினி இருந்ததால் அவர் பொங்கலுக்கு கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் இதுவரை கட்சியை தொடங்கவில்லை.
8 மாதங்கள்
அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாள் அன்றே கட்சி கொடி, கட்சியின் பெயர் என அனைத்தும் தயார். இனி அம்பு எய்துவது மட்டுமே பாக்கி என்று கூறியிருந்த நிலையில் அம்பு எய்துவதற்கு 8 மாதங்களாக என்று ரசிகர்களே வேதனைப்படும் நிலை ஏற்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல்
அவருக்கு பின்னர் வந்த கமல்ஹாசனும் கடந்த பிப்ரவரி மாதம் கட்சியை தொடங்கிவிட்டார். இதனால் இரு தரப்பு ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல்களும் ஏற்பட்டன. இந்நிலையில் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இடைத்தேர்தல்களும், நாடாளுமன்றத் தேர்தலும் வரவுள்ளது.
கட்சி தொடங்கவில்லை
இதில் ரஜினி போட்டியிட்டு மக்கள் செல்வாக்கை அறிய வேண்டும் என விரும்புகின்றனர். மேலும் நேற்று வந்த விஷாலுக்கு எப்படியோ விஜயை காப்பியடித்து கட்சிக்கு பெயரும், கொடியும் அறிமுகப்படுத்தி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது வரை பேசிய நிலையில் ரஜினி கட்சியை தொடங்காதது கவலையளித்தது.
அடுத்த மாதம்
இந்நிலையில் ரஜினிகாந்த் செப்டம்பர் 9 அல்லது 12-ஆம் தேதி கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் கோவை அல்லது மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல்களால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.