ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்
இலங்கையில் இலவச வீடுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளயிருந்த ரஜினிகாந்ததின் பயணத்தை அரசியலாக்கி விட்டார்கள் என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை: இலங்கையில் நடைபெறவுள்ள விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருக்கலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் வவுனியாவில் 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க இருந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் இந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். எனவே முழு மனதின்றி, பயணத்தை ரத்து செய்துள்ளார் ரஜினிகாந்த்.
இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் தெரிவிக்கையில், நடிகர் ரஜினிகாந்தின் இலங்கை பயணத்தை அரசியலாக்கி விட்டனர். திருமாவளவனும் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு முறை யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அங்கு சென்றிருந்தால் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும் என்றார் அவர்.