தனிக்கட்சி தொடங்காமல் டிச. 31-ல் அரசியல் 'நிலைப்பாடு' அறிவிக்கும் ரஜினிகாந்த்.. பாஜகவுக்கு ஆதரவு?
தனிக்கட்சி தொடங்காமல் டிசம்பர் 31-ந் தேதி அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்.
Recommended Video
சென்னை: தனிக்கட்சி தொடங்காமல் தமது அரசியல் நிலைப்பாட்டை டிசம்பர் 31-ந் தேதி அறிவிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். தனிக் கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் உறுதியாக எதனையுமே கூறாததால் வழக்கம் போல ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.
தமிழக அரசியலில் காலூன்றுவதற்கான அத்தனை வழிகளையும் பாஜக முயற்சித்து வருகிறது. அதிமுகவை உடைத்து ஒட்ட வைத்து முட்டி மோதிப் பார்த்தது.
ஆனால் பாஜகவின் ஆதரவு பெற்ற அதிமுக என்பதாலேயே ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை துரத்திஅடித்துவிட்டனர். பாஜகவை கடுமையாக எதிர்ப்பார் என்ற நப்பாசையிலும் பணம் நிறையவே கிடைக்கும் என்ற பேராசையிலும் தினகரனுக்கு வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர் ஆர்கே நகர் மக்கள்.
ஆர்கே முடிவு
ஆர்.கே.நகர் முடிவைத் தொடர்ந்து தற்போது அதிமுகவிம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியிடம் இருந்து பாஜக விலகத் தொடங்கிவிட்டதற்கான சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் தமது அரசியல் நிலைப்பாடு பற்றி டிசம்பர் 31-ந் தேதி அறிவிப்பேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரொம்ப தயங்கும் ரஜினி
ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்குவார் என 40 ஆண்டுகாலமாக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த ரசிகர்கள் பேரப் பிள்ளையை பெற்றெடுத்து வளர்த்தும்விட்டார்கள். இன்னமும் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவதற்கு ரொம்பவே தயங்குகிறார்,
அரசியல் நிலைப்பாடுதான்...
இன்று சென்னையில் ரசிகர்களை சந்தித்த போதும் கூட, அரசியலுக்குப் போனால் ஜெயிக்க வேண்டும்; அதற்கு வியூகம் வேண்டும் என பொடி வைத்துத்தான் பேசியிருக்கிறார். மேலும் வரும் 31-ந் தேதி அரசியல் நிலைப்பாட்டை சொல்வேன் என்று மட்டும் தெரிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
கசக்கும் இரட்டை இலை
தற்போதைய சூழ்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக, தமிழகத்தில் எதைத் தின்னால் பித்தம் தெளியும் என போராடிக் கொண்டிருக்கிறது. இரட்டை இலையை தின்று பார்த்த பாஜகவுக்கு வாந்தி பேதிதான் மிச்சம். இதனால் குக்கர் சமையலுக்கு ஏங்க வாய்ப்பிருக்கிறதே என்பதே தற்போதைய கள நிலவரம்.
ரஜினியையும் இழுத்து கொண்டு
இந்த குக்கர் சமையலோடு கூட்டு பொரியலாக ரஜினியையும் பாஜக கோர்த்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் பாஜக என்றாலே மிளகாய் பொடியை கண்ணில் தூவியதாக துடிக்கும் தமிழக மக்கள் ரஜினியுடன் சேர்ந்து வந்தால் ஒரு வேளை மாறுவார்கள் என நம்புகிறதோ டெல்லி?