போலீஸ் விவகாரத்தை முன்வைத்து காவிரி பிரச்சினையை திசை திருப்புகிறாரா ரஜினி?
காவிரி பிரச்சனையை திசை திருப்பவே ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவை போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: காவிரி போராட்டத்தை போலீஸுக்கு எதிரான வன்முறை பிரச்னையாக மாற்றிவிட்டார் ரஜினி' என்கின்றனர் விவசாய சங்கப் பிரதிநிதிகள். ' சீமானைக் கைது செய்வதற்கான முனைப்பில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். காவிரி விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன' எனக் கொதிக்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
சென்னை ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், போராட்டக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும் போலீஸாரைத் தாக்கத் தொடங்கினர். இதற்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் ரஜினிகாந்த், 'வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறைக் கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லையென்றால், நாட்டுக்கே பேராபத்து' எனக் கொதித்திருந்தார்.

இந்தக் கருத்தை வரவேற்ற பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை, ' பொதுமக்களைப் பாதிக்கும் அளவுக்கும், சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் அளவுக்கும் நடந்துகொள்ளும் வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது சரியானதே' எனக் கூறியிருந்தார். போலீஸுக்கு ஆதரவான ரஜினியின் கருத்து அரசியல் களத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்பட தமிழ் ஆர்வலர்கள் பலரும் ரஜினியின் கருத்துக்கு எதிராக எழுதி வருகின்றனர்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, " போலீஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில் ரஜினி ஒரு பக்கமும் மற்ற அரசியல் கட்சிகள் மற்றொரு பக்கமும் நிற்கின்றன. இந்த விவகாரம் மூலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு மறைமுக ஆதரவு நிலைப்பாட்டில் நின்று அவர் பேசியிருக்கிறார். போலீஸ் மீதான தாக்குதலைக் கண்டித்ததன் மூலம், நாம் தமிழர் கட்சியோடு பகிரங்கமாக மோதியிருக்கிறார். என்றார்.
அதேநேரம், "ரஜினியின் ட்வீட்டுக்குப் பின்புலத்தில் சில அழுத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன" என விவரித்த அரசியல் விமர்சகர் ஒருவர், நாளை ராணுவக் கண்காட்சி நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி வரவிருக்கிறார். 'இந்தநேரத்தில் தமிழகமே கறுப்பு வண்ணத்தில் மாறும் அளவுக்கு கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்த வேண்டும்' என அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ' காவல்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலை தீவிரமாக முன்னெடுத்தால், காவிரி விவகாரம் நீர்த்துப் போய்விடும்' என உளவுத்துறையில் உள்ள சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். அதன் அடிப்படையிலேயே ரஜினியைக் கருத்து கூற வைத்தனர். இப்போது சீமான் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவுகிறது. அப்படி நடந்தால், தமிழ் ஆர்வலர்கள் திரண்டுவிடுவார்கள். மோடியின் வருகையும் சிறப்பானதாக மாறிவிடும் எனச் சிலர் ஆலோசனை கூறியுள்ளனர்.
அதன் எதிரொலியாகவே கொலை முயற்சி உள்பட பத்து பிரிவுகளில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2009-ம் ஆண்டு ஈழப்போராட்டம் வெடித்தபோது, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்தை கடத்தும் வேலைகளும் நடந்தன. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த காவல்துறை, வழக்கறிஞர்கள் மீது வரலாறு காணாத வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. இதன்பிறகு ஈழப்போராட்டம் மறைந்து போய், காவல்துறை வெர்சஸ் வழக்கறிஞர்கள் என போராட்டக் களம் திசை திரும்பியது. இதே யுக்தியைத்தான் ரஜினி மூலம் உளவுத்துறை செய்கிறது. இதற்கு டெல்லி லாபியும் துணை நின்றிருக்கிறது" என்றார் உறுதியாக.












Click it and Unblock the Notifications