கருணாநிதி சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.. காவிரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் பேட்டி
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் காவிரி மருத்துவமனைக்கு இன்று இரவு 8.45 மணியளவில் சென்ற, நடிகர் ரஜினிகாந்த், உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங் மலை பிரதேசங்களில் நடைபெற்றது. பின்னர் சென்னை வந்த ரஜினிகாந்த் அரசியல் நடவடிக்கை குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதன்பிறகு அடுத்தகட்ட, படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த். அங்கு 2 வாரங்களாக படப்பிடிப்பு நடந்தது. ரஜினிகாந்தும், சிம்ரனும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
டேராடூனில் நடந்த படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்று சென்னை திரும்பும் ரஜினிகாந்த், நேரடியாக இரவு 8.45 மணிக்கு காவிரி மருத்துவமனை சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.
சுமார் 15 நிமிடங்கள் காவிரி மருத்துவமனைக்குள் நேரம் செலவிட்ட ரஜினிகாந்த், பின்னர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். ரஜினிகாந்த் கூறியதாவது: இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதி உடல் நலம் விசாரிக்க வந்தேன். அவர், தூங்கிக்கொண்டிருந்தார். அண்ணன் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, கனிமொழி, செல்வம் எல்லோரும் அங்கே இருந்தனர். அவர்களுக்கு நான் ஆறுதல் சொன்னேன். அது ஒன்றுதான் என்னால் செய்ய முடியும். கருணாநிதி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.
கருணாநிதி மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நீண்ட கால நண்பர்களாகும். 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என வெளிப்படையாக அறிவித்தவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.