1996,98, 2004 தேர்தல்களில் ரஜினிகாந்த் கொடுத்த 'வாய்ஸ்'.. தமிழக மக்களின் ரியாக்ஷன்... ப்ளாஷ்பேக்
1996-ம் ஆண்டு முதல் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் வாய்ஸ் கொடுத்து வருகிறார். அவரது வாய்ஸ்-க்கும் மக்கள் ரியாக்ஷன் கொடுத்தும் வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: தமது அரசியல் நிலைப்பாடு பற்றி வரும் 31-ந் தேதி அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார். அத்துடன் தாம் அரசியலுக்கு புதியதாக வரவில்லை...1996-ம் ஆண்டு முதல் அரசியலில் இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தும் இருக்கிறார்.
தமிழக அரசியல் களங்களில் ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டு முதல் வாய்ஸ் கொடுத்து வருகிறார். 1991-96-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஊழல் ஆடம்பர அராஜக ஆட்சி தமிழகம் அதுவரை கண்டிராத ஒன்றாக இருந்தது.
குறிப்பாக வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே அதிர வைத்தது. இதனால் அப்போதைய அதிமுக அரசுக்கு எதிராக மக்களிடையே பெரும் கோபப் புயல் வீசிக் கொண்டிருந்தது.

ரஜினிகாந்த் பேச்சு
அதே கால கட்டத்தில் 1995-ம் ஆண்டு பாட்ஷா பட விழாவில் தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி இருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் முன்னிலையிலேயே பகிரங்கமாக பேசினார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் முதல் அரசியல் பேச்சு இதுதான். இதையடுத்து ரஜினிகாந்தை மையமாக வைத்து அரசியல் பேச்சுகள் கிளம்பின.

தமாகா உதயம்
அப்போதைய தேர்தலில் தமிழகத்தின் களநிலவரத்தை உணராமல் டெல்லி காங்கிரஸ் மேலிடம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தது. இதற்கு எதிராக தமிழக காங்கிரஸில் மூப்பனார் தலைமையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் விளைவாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயமானது.

திமுக கூட்டணிக்கு ரஜினி வாய்ஸ்
திமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்ததது. இந்த கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவை பகிரங்கமாக தெரிவித்தார். இது ரஜினிகாந்த் அரசியல் தொடர்பாக மேற்கொண்ட முதலாவது நிலைப்பாடு. அப்போதுதான், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்கிற முழக்கத்தையும் ரஜினிகாந்த் முன்வைத்தார். ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக வீசிய அதிருப்தி பேரலையானது திமுக- தமாகா கூட்டணிக்கு அமோக வெற்றியைத் தந்தது. இந்த வெற்றியில் ரஜினியின் வாய்ஸுக்கும் பங்கு இருக்கிறது என தமிழக அரசியல் வரலாற்றில் எழுதப்பட்டுவிட்டது.

எடுபடாத ரஜினி வாய்ஸ்
இதன்பின்னர் 1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தார். இந்த வாய்ஸை அப்போது தமிழக மக்கள் நிராகரித்துவிட்டனர். அந்த தேர்தலில் அதிமுகதான் அமோக வெற்றி பெற்றது. இதன்பின்னர் ரஜினி அரசியல் பேச்சை குறைத்துக் கொண்டார்.

நிராகரித்த மக்கள்
2004-ம் ஆண்டு பாமகவுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. பாபா திரைப்படத்தை திரையிடவே முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இதே ராகவேந்திரா மண்டபத்தில், பாமகவை எதிர்த்து வாக்களியுங்கள் என ரசிகர்களுக்கு உத்தரவிட்டார் ரஜினிகாந்த். ஆனால் அதுவும் கை கொடுக்கவில்லை.

பேச்சின் பின்னணி இதுதான்
1996-ம் ஆண்டு தேர்தல் களத்தைத் தவிர அதன்பின்னர் ரஜினியின் தேர்தல் வாய்ஸ் எதுவும் எடுபடவில்லை. தமிழக மக்கள் ரஜினியின் வாய்ஸை பொருட்டாக மதிக்கவே இல்லை. இதனை உணர்ந்துதான் அரசியலில் வெற்றி பெற வியூகம் வேண்டும்; அரசியல் ஆழம் உணர்ந்தே தயங்குகிறேன் என ரஜினிகாந்த் இன்றும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications