கூட்டணி குறித்து கேட்ட நிருபர்... வெட்கமா இல்லையா..? எனச் சீறிய ராமதாஸ்
ஈரோடு: தமிழக சட்டசபைத் தேர்தலில் கூறியபடி தனித்து போட்டியிடுவீர்களா, இல்லை முந்தைய தேர்தல்கள் போல் கடைசி நேரத்தில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து கொள்வீர்களா எனக் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் கோபப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், பாமக முன்னதாகவே அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகிறது.
அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி, இல்லையென்றால் தனித்துப் போட்டி என்ற முடிவோடு பாமக செயல்பட்டு வருகிறது.
கெயில் விவகாரம்...
இந்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராமதாஸ். அப்போது அவர், "விவசாய விளைநிலங்களின் வழியாக தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் கெயில் நிறுவனம் அமைக்கும் கேஸ் குழாய்களின் திட்டத்தை, அது உச்சநீதிமன்றத்தில் வழக்கு போனபோது வழக்கை முறையாக நடத்தாததன் விளைவே விவசாயிகளுக்கு எதிரான தீர்ப்பு வந்தது.
தனித்துப் போட்டி...
அதிமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவேயில்லை. மாற்றுத்திறனாளிகளின் கோரிக் கைகளை கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. இதுபற்றி நான் நேரில் வந்து ஜெயா டிவியில் விவாதிக்க தயாராக இருக்கிறேன். வருகிற தேர்தலில் பாமக தனித்துதான் நிற்கும். 120 முதல்130 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்''எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து...
அப்போது செய்தியாளர் ஒருவர், ‘ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தனித்துப்போட்டி போன்று பேசுகிறீர்கள், ஆனால் யாருடனாவது கூட்டணி வைத்து விடுகிறீர்கள். இந்த தேர்தலில் உறுதியாக தனித்து போட்டியீடுவீர்களா? கடைசி வரை உங்கள் முடிவில் உறுதியாக இருப்பீர்களா ? பொதுவாக, பாமக இப்படித்தான் தங்களுடைய கருத்தில் வலுவாக இருப்பாங்க. கடைசி நேரத்துல மாறிடுவாங்க. தேர்தல் நேரத்தில் ஏதோ ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்கள் என மக்களிடம் பேச்சு உள்ளதே? என கேள்வி எழுப்பினார்.
வெட்கமாக இல்லையா...?
இதைக் கேட்டு கோபமடைந்த ராமதாஸ், சம்பந்தப்பட்ட செய்தியாளரைப் பார்த்து, ‘இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்குறீங்களே உங்களுக்கே வெட்கமாக இல்லையா?' என பதில் கேள்வி எழுப்பினார்.
சலசலப்பு...
இதனால் அங்கு செய்தியாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டணி குறித்து கேள்வி கேட்பது என்ன தரமில்லாத கேள்வியா என அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
ஏற்கனவே, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பத்திரிகையாளர்களைப் பார்த்து தூ எனத் துப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராமதாஸின் இந்த செயல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக பெண் ஊராட்சித் தலைவர் கைது:
முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட பாமக பெண் ஊராட்சி மன்றத் தலைவி கைது செய்யப்பட்டு, இரவு முழுவதும் சிறையில் வைக்கப்பட்டதற்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆளுங்கட்சியினரின் அத்துமீறலுக்கு அடிபணிய மறுத்ததற்காக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் பெண் ஊராட்சி மன்றத் தலைவியை பொய்வழக்கில் கைது செய்து இரவு முழுவதும் காவல்நிலையத்தில் அடைத்து வைத்து காவல்துறையினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக காவல்துறை மூலம் ஆளுங்கட்சியினர் கட்டவிழ்த்து விடும் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது ஆகும்.
பழி வாங்கும் நடவடிக்கை:
மாலை 6 மணிக்கு மேல் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதை மீறி பெண் என்றும் பாராமல் இரவு 8.00 மணிக்கு கைது செய்து இன்று காலை 7 மணி வரை காவல்நிலையத்தில் அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
ஆட்சிக்காலத்தின் இறுதி கட்டத்திற்கு வந்து விட்ட அதிமுக அரசு, தமக்கு போட்டியாக உள்ள எதிர்க்கட்சிகளை முடக்கும் நோக்கத்துடன் தான் இத்தகைய பழிவாங்கல் மற்றும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி பெண் ஊராட்சித் தலைவர் சுனிதா பாலயோகியை இரவில் கைது செய்து கொடுமைப்படுத்திய காவல் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்ட சுனிதா உள்ளிட்ட 13 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு ஆணையிட வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.