ஏழு தமிழர்கள் விடுதலையில் நடிக்கிறது தமிழக அரசு- பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர் விடுதலைக்காக நடவடிக்கை எடுத்துள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி நாடகமாடுகிறது ஜெயலலிதா தலைமையிலான அரசு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 24 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இதற்காக மத்திய அரசு கூறும் காரணம் ஏற்க முடியாதது ஆகும்.
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழர்களும் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் எந்த வகையிலும் சம்பந்தப்படாதவர்கள் ஆவர். இராஜிவ் கொலை வழக்கில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி 7 பேர் விடுதலை தொடர்பாக கருத்து தெரிவிக்க மத்திய அரசு மறுப்பது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலாகும். 7 தமிழர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு அதற்காகத் தேடிக் கண்டுபிடிக்கும் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு யாரோ தொடர்ந்த ஒன்றல்ல.
அதேநேரத்தில் மத்திய அரசின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கவில்லை. காரணம் மத்திய அரசின் நிலைப்பாடு இப்படித் தான் இருக்கும் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். அதனால் தான் இச்சிக்கலில் மத்திய அரசிடம் விண்ணப்பிப்பதை விட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் எளிதாக விடுதலை செய்யலாம் என்று பா.ம.க. தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசோ இந்த வழியை கடைபிடிக்காமல் மத்திய அரசிடமே திரும்பத் திரும்ப விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் 7 தமிழர்கள் விடுதலையில் தமிழக அரசுக்கும் விருப்பம் இல்லை என்பது தான். 7 தமிழர் விடுதலைக்காக நடவடிக்கை எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே ஜெயலலிதா அரசு இத்தகைய நாடகங்களை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், உடனடியாக தமிழக அரசு செய்வதற்கு எதுவுமில்லை.இவ்வழக்கில் 7 தமிழர்களும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுவதால் அவர்கள் அனைவரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு மத்திய அரசு சம்மதிக்க வேண்டும். அது சாத்தியமாகா விட்டால், அடுத்த மாதம் பா.ம.க அரசு பதவியேற்றவுடன், அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு 7 தமிழர்களையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தமிழ் உணர்வாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.