ஜெயலலிதாவின் முதல்வர் பதவி நாட்கள் எண்ணப்படுகின்றன.. ராமதாஸ் மகிழ்ச்சி
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பிற்கு எதிரான கர்நாடக அரசின் மேல் முறையீட்டிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்ததுடன், தமிழக மக்களின் கோரிக்கையும் இதன் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கர்நாடகாவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனை பெற்று பின்னர் ஜாமீனில் வெளிவந்து, மேல்முறையீட்டில் விடுதலையானார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி நாட்கள் எண்ணப்படுகின்றன
— Dr S RAMADOSS (@drramadoss) June 23, 2015
குற்றம் சாட்டப்பட்டிருந்ததால் முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் இழந்திருந்த ஜெயலலிதா, இவ்வழக்கிலிருந்து விடுதலையானதால் மீண்டும் முதல்வரானார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தற்போது போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால் முதல்வர் பதவியில் நீடிக்கும் உரிமையை ஜெயலலிதா இழந்து விட்டார். இந்த மேல்முறையீட்டின் மூலமாக தமிழக மக்களின் அப்பீல் மனு தொடர்பான கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் முதல்வர் பதவி நீடிக்கும் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை அதிமுகவினர் மனதில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.