மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவில் சென்று அநாகரீகமாக நடந்த அமைச்சரை கைது செய்க: ராமதாஸ்
சென்னை: மாணவிகள் விடுதியில் இரவில் ஆய்வு என்ற பெயரில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படும் அமைச்சர் சுந்தர்ராஜனை, ஈவ் டீசிங் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட விளையாட்டு விடுதியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் சுந்தர்ராஜன் நள்ளிரவில் புகுந்து ஆய்வு என்ற பெயரில் அங்குள்ள மாணவிகளிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி யுள்ளன.
நாகரிகத்துக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய அமைச்சரே அநாகரிகமாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான எஸ். சுந்தர்ராஜன் கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட மகளிர் விளையாட்டு விடுதிக்கு இரவு நேரத்தில் ஆய்வுக்கு சென்றிருக்கிறார்.
பொதுவாக விடுதிகளில் பகல் நேரங்களில் தான் ஆய்வுக்கு செல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக மகளிர் விடுதியில் ஆண்கள் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அமைச்சர் சுந்தர்ராஜன் விதிகளையும், மரபுகளையும் காற்றில் போட்டு மிதித்துவிட்டு இரவில் ஆய்வுக்கு சென்றது அத்துமீறி நுழைவதற்கு இணையான குற்றம் ஆகும்.
இது போன்ற ஆய்வுகளின் போது விடுதியின் காப்பாளர் உள்ளிட்ட பெண் அதிகாரிகள் உடனிருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஆனால், இவ்விதிகள் எதையும் அமைச்சர் சுந்தர்ராஜன் கடைபிடிக்கவில்லை.
இதற்கெல்லாம் மேலாக விடுதி வளாகத்தில் அமைச்சர் நடந்து கொண்ட விதம் அருவறுக்கத்தக்கது ஆகும். மாணவிகளை வரிசையாக நிறுத்தி வைத்த அமைச்சர், அக்குழந்தைகளின் ஆடைகளை தொட்டும், இழுத்தும் வக்கிரமாக கிண்டல் செய்தபடியே பேசுகிறார்.
ஒரு மாணவியின் இடுப்பைத் தொட்டு மேலாடையை இழுக்கும் அமைச்சர்,‘‘ உன்னிடம் எத்தனை சட்டைகள் உள்ளன. உன் பெட்டியை திறந்து பார்க்கலாமா?'' என்று ஆய்வுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத கேள்வியை கேட்கிறார்.
அடுத்ததாக, ஒரு மாணவியைப் பார்த்து,‘‘ உன்னைப் பார்த்தால் ஹாக்கி விளையாடுபவரைப் போல தெரியவில்லையே?'' என்கிறார். உன் எடை கூடியிருப்பது உன் தாய்க்கு தெரியுமா? என அமைச்சர் கேட்டதும், ‘‘இல்லை, எனது தந்தைக்கு தான் தெரியும்'' என்று அந்த மாணவி கூறுகிறார். அதற்கு ‘‘அப்படியானால் உங்க அம்மா உங்க அப்பா கூட இல்லையா?'' என அமைச்சர் வக்கிரமாக கேட்கிறார்.
மற்றொரு மாணவி தனது தந்தை இறந்து விட்டதாக கூறுகிறார். அதைக் கேட்ட அமைச்சர்,‘‘ உங்க அப்பா இறந்துட்டாரா அல்லது வெளியில் ஓடி டிராவலிங் போய்விட்டாரா?'' என கொச்சையாக கேட்கிறார். அமைச்சரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாத மாணவிகள் அவமானத்தில் தலை குனிகின்றனர்.
அதுமட்டுமின்றி, அமைச்சர் சுந்தர்ராஜன் பேசும் போது நாக்கு குளறுவதைப் பார்த்தால், அவர் மது அருந்தி இருக்கலாமோ? என்ற ஐயம் எழுகிறது. இதுபற்றி அமைச்சரிடம் தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தியாளர் விளக்கம் கேட்டபோது, ‘‘நான் மாணவிகளிடம் சகஜமாகத் தான் பேசினேன்'' என்று கூறியிருக்கிறார்.
மாணவிகள் விடுதியில் ஆய்வு செய்ய எவ்வளவோ நேரம் இருக்கும் போது இரவு நேரத்தில் ஆய்வுக்கு செல்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மேலும், மாணவிகளிடம் அவர் கேட்ட கேள்விகள் ஆய்வுக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாதவை.. மாணவிகளின் கண்ணியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடியவை. அமைச்சரின் இந்த செயல் பெண்களை வன்கேலி செய்வதற்கு ஒப்பானது ஆகும். அமைச்சரின் இத்தகைய செயலை ஒரு போதும் மன்னிக்க முடியாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் எந்த லட்சணத்தில் இருக்கின்றன என்பதற்கு சுந்தர்ராஜனின் செயல்பாடுகள் தான் உதாரணம்.
பெண் முதலமைச்சர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தும் செயல்களில் அமைச்சர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற புகார்களில் சிக்கி பதவி இழந்த அமைச்சர்களின் பெயர்களை பட்டியலிட்டால் அது நீளமானதாக இருக்கும். மக்களுக்காக வாழ்வதாகக் கூறிக் கொள்ளும் முதலமைச்சரின் கீழ் உள்ள அமைச்சர்களின் செயல்கள் அவமானத்தை மட்டுமே தேடித் தருகின்றன.
மதுவின் தாக்கத்தில் மகளிர் விடுதிக்கு சென்று ஆய்வு என்ற பெயரில் அநாகரிகமாக நடந்து கொண்ட அமைச்சர் சுந்தர்ராஜனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354 (பெண்களின் கண்ணியத்துக்கு குந்தகம் விளைவித்தல்), வன்கேலி சட்டம் (Eve Teasing) ஆகியவற்றில் அமைச்சர் சுந்தர்ராஜன் மீது வழக்குப் பதிவு செய்வதுடன், அவரை கைது செய்து தண்டனை பெற்றுத்தர காவல்துறை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.