ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் பரபரப்பு- கே.என் நேரு குடும்பத்திற்கு சம்மன் அனுப்புகிறது சிபிஐ
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை தொடங்கியுள்ள சிபிஐ, நேரு குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
Recommended Video

சென்னை: முன்னாள் அமைச்சர் கே. என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை
சிபிஐ தொடங்கியுள்ளது. நேரு குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி காலை நடைபயிற்சிக்குச் சென்றபோது காணாமல் போனார். பிறகு அன்றே அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம். இவரது கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் 5 ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.

சிபிஐ விசாரணைக்கு மாற்ற வழக்கு
ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமெனக் கோரி அவரது மனைவி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இதுவரை ரகசிய அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகளின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.

சிக்காத கொலையாளி
இந்த வழக்கில் இதுவரை 1,100 பேருக்கு மேல் விசாரிக்கப்பட்டனர். ராமஜெயத்தைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 294 வாகனங்கள் ஆய்வுசெய்யப்பட்டன. 2910 மொபைல் போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றைப் பயன்படுத்தியவர்கள் விசாரிக்கப்பட்டிருப்பனர். ஆனாலும் கொலையாளிகள் சிக்கவில்லை.

உறவினர்கள் மவுனம்
ராமஜெயத்திற்கு தொழில்ரீதியாகவும் தனிப்பட்ட வழியிலும் பல விரோதங்கள் இருந்துள்ளன என்றும் இது தொடர்பாக அவருக்கு நெருக்கமானர்கள் கூடுதல் விவரங்களை அளித்தால், அவை விசாரணை செய்யப்படும் என்றும் சட்டசபையில் கூறினார் முதல்வர். ஆனாலும் உறவினர்கள் யாரும் வாயே திறக்கவில்லை.

ரூ. 2 லட்சம் பரிசு
ராமஜெயம் கொலையை பொறுத்தவரை போலீசாருக்கு கிடைத்த முக்கிய தடயம் அவர் பயன்படுத்திய செல்போன்களின் எண்கள் மட்டுமே. இந்த வழக்கில் துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

குற்றவாளி சிக்குவார்களா?
ராமஜெயம் மனைவி தொடர்ந்த வழக்கில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. 3 மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

சிபிஐ சம்மன்
கடந்த 5 ஆண்டுகாலமாக குற்றவாளிகள் குறித்த ஒரு துப்பு கூட கிடைக்காத நிலையில் வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ விசாரணையை துவக்கியுள்ளது. இந்த கொலை தொடர்பாக நேரு குடும்பத்தைச் சேர்ந்த சிலரிடம் சரிவர விசாரிக்கவில்லை என்று தகவல் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலையாளி சிக்குவார்களா?
கொலை செய்யப்பட்ட தினத்தன்று ராமஜெயம் எங்கே சென்றிருந்தார். யாரை சந்திக்க சென்றார் என்று அவரது குடும்பத்தினர் வாயை திறந்தால் மட்டுமே கொலையாளிகள் சிக்குவார்கள். ராமஜெயத்தை கொன்ற குற்றவாளி யார் என்று சிபிஐ விசாரணையில் தெரியவருமா என்பது அந்த ஸ்ரீ ரங்கநாதருக்கே வெளிச்சம்.












Click it and Unblock the Notifications