குஷ்புவும், நமீதாவும் மானாட மயிலாட நிகழ்ச்சியில மார்க் போடுறாங்க…. ராமராஜன் கலர்ஃபுல் பிரச்சாரம்
ராமநாதபுரம்: அம்மா படிக்கும் பிள்ளைகளுக்கு மார்க் போடுறாங்க. ஆனா குஷ்புவும் நமீதாவும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில உக்காந்து மார்க் போடுறாங்க என்று தேர்தல் பிரச்சாரத்தில் கலகலப்பூட்டினார் நடிகர் ராமராஜன்.
மஞ்சக்கலரு... பிங்க் கலரு... பச்சைக் கலரு என கலர் கலராய் சட்டை போட்டு வாக்காளர்களின் கண்ணைக் கவரும் வகையில் பளிச் என பிரச்சாரம் செய்து வருகிறார் ராமாராஜன்.
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு புறப்பட்டுள்ள ராமராஜன், ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அன்வர் ராஜாவுக்கு வாக்கு கேட்டுப் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது அதிமுகவினரையும், வேட்பாளரையும், மட்டுமல்லாது, வாக்காளர்களையும் உற்சாகப்படுத்தியது.
அம்மா பிரதமராவர்
'இந்தத் தேர்தல்தான் தமிழகத்தைச் சேர்ந்த அம்மாவைப் பிரதமராக்க நடைபெறும் தேர்தல். அம்மா பிரதமரானால்தான், தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாடியே துணிச்சலாக வேட்பாளர்களை அறிவித்துப் பிரசாரத்தையும் தொடங்கியவர் புரட்சித் தலைவி அம்மாதான்.
பக்கோடா, துக்கடா கட்சி
40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அம்மாவை எதிர்த்துத் தனியாகச் சந்திக்க எந்தக் கட்சிக்கும் தைரியம் இல்லை. தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருக்கு. பெரிய கட்சி, சிறிய கட்சி, பக்கோடா கட்சி, துக்கடா கட்சிலாம் இருக்கு. ஆனா, எந்தக் கட்சிக்கும் ஒரு பெண் தலைவரா இருக்காங்களா? அ.தி.மு.க-வில் மட்டும் அம்மா தலைவராக இருக்காங்க.
அங்கிட்டு… இங்கிட்டு
இன்ன தேதி வரை சில கட்சிகள் ஒண்ணு இங்கிட்டு போகுது... ஒண்ணு அங்கிட்டு போகுது. தி.மு.க-வில் ஸ்டாலின் எங்கள் கூட்டணி கதவு மூடியாச்சுனு சொன்னார். ஆனா, கொல்லைப் பக்கமா கதவைத் திறந்து வெச்சு வாங்க வாங்கனு கம்யூனிஸ்ட்ட கூப்பிடுறார்.
வடநாட்டு தலைவர்களே சொல்றாங்க…
வட நாட்டு தலைவர்களே அம்மா பிரதமர் ஆவாங்கனு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. பி.ஜே.பி-யைச் சேர்நத அத்வானி, 'வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராது. பி.ஜே.பி-யும் ஆட்சிக்கு வராமல் போனால் ஒரு மாநில தலைவர்தான் ஆட்சிக்கு வருவார்' என்று சொல்லி இருக்கார். அந்த மாநிலம் தமிழகம்தான் எனச் சொல்லாமல் சொல்லிவிட்டார்.
டிவியில பாருங்க
கர்நாடகத்தைச் சேர்ந்த தேவகவுடா 23 எம்.பி-யை வெச்சு பிரதமர் ஆகும்போது 40 எம்.பி-யை வெச்சு அம்மா பிரதமராவதை எல்லாரும் டி.வி-யில பாக்கத்தான் போறீங்க.
தூங்காத அம்மா
99-ல் நான் நாடாளுமன்ற உறுப்பினரா இருந்தேன். அப்ப நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் பேசிக்கிட்டு இருந்தார். இந்தி தெரியாத நானும் அவர் பேச்சைக் கேட்டுகிட்டு மண்டையை ஆட்டிக்கிட்டு இருந்தேன். அப்ப என் பின்னால் குறட்டைச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். தேவகவுடா தூங்கிட்டு இருந்தார். இப்படி தூங்குறவரா நம்ம நாட்டு பிரதமரா இருந்தார்னு வேதனைப்பட்டேன். அப்படியானால் தூங்காமல் பணியாற்றிவரும் அம்மா ஏன் பிரதமர் ஆகக் கூடாது?
செண்பகமே… செண்பகமே…
அம்மா அரிசி இலவசமா கொடுகறாங்க. கஷ்டப்பட்ட மக்களுக்கு ஆட்டையும் மாட்டையும் கொடுத்தாங்க. ஆடு குட்டி போடும்போது... அது காசு. பசு லிட்டர் கணக்கா பால் கறக்கும். அதுவும் காசு. பால் கறக்கலையா... 'செண்பகமே செண்பகமே'னு பாட்டு பாடுங்க. தன்னால பால் வரும்'' என்று பாடியும் காண்பித்தார்.
குஷ்புவும்… நமீதாவும்
''அம்மா கையால லேப்டாப் வாங்குனவுங்க இந்தத் தேர்தல்ல முதல் முறையா கன்னி ஓட்டு போடப்போறாங்க. அவங்க மொத்த ஓட்டும் அம்மாவுக்குத்தான். அம்மா படிக்கும் பிள்ளைகளுக்கு மார்க் போடுறாங்க. ஆனா குஷ்புவும் நமீதாவும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில உக்காந்து மார்க் போடுறாங்க.
மின்சாரப்பிரச்சினை
ஒரு இட்லி ஒரு ரூபாய்க்குக் கொடுத்து ஏழைகள் வயிறு நிரம்பவைத்தவர் அம்மா. வேணும்னா நீங்களும் ஒரு ரூபாய்க்கு இட்லி போட வேண்டியதுதானே? தமிழகத்தில மின்சார பிரச்னைக்குக் காரணம் கருணாநிதி. அம்மா வந்துதான் அதைக் கொஞ்சம் கொஞ்சமா சரிசெஞ்சு இருக்காங்க.
துணிச்சல்கார அம்மா
ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டபட்டவர்களை விடுவித்தது அம்மாவின் துணிச்சல். அப்படித் துணிச்சலானவங்க கையிலதான் பிரதமர் பதவி இருக்கணும்'' என்று பேசி கலகலப்பூட்டினார் ராமராஜன்.