ஆர்.கே நகரில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.. ஹைகோர்ட்டில் வழக்கு!
சென்னை ஆர்கே நகர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை : மறைந்த ஜெயலலிதாவின் ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி ரமேஷ் என்பவ்ர சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டசபை தொகுதி, அவரது திடீர் மரணத்தால் காலியாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி ஆர்.கே நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்த ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது.
வேட்பு மனு தாக்கல்கள் முடிந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் ஆர்கே நகர் தொகுதியில் வேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவித்தது.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் பணப்பட்டுவாடா புகாரில் சிக்கியுள்ள ஆர்.கே நகருக்கு அந்த விதி பொருந்தாது எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலை நட்த்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஹைகோர்ட்டில் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இடைத்தேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் ஜீலை 3ம் தேதி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.