ராமேஸ்வரம்- அயோத்தி நேரடி ரயில் சேவை தொடக்கம்... ரயிலின் சிறப்புகள் என்னென்ன?
ராமேஸ்வரம்- அயோத்தி வரை செல்லும் நேரடி ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - அயோத்தி வரை வாரந்தோறும் செல்லும் நேரடி ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இரு புனித நகரங்களான ராமேஸ்வரம், அயோத்தி ஆகிய இடங்களில் நேரடி ரயில் சேவை இதுவரை இல்லை. மேலும் இரு இடங்களையும் இணைக்கும் ரயில் சேவை நீண்ட நாள் கோரிக்கையாகும்.
இந்த கனவு திட்டத்தை பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்துல் கலாமின் மணி மண்டபத்தை தொடங்கி வைக்க ராமேஸ்வரம் வந்த மோடி ராமேஸ்வரம்- ஃபைசாபாத் இடையே அயோத்தி வழியாக அதிவிரைவு ரயில் சேவை தொடங்கி வைத்தார்.

வாரந்தோறும்
இந்த ரயிலானது வாரந்தோறும் இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து 12.30 மணிக்கு புறப்பட்ட அந்த ரயிலானது சனிக்கிழமை இரவு 11 மணிக்கு உத்தரப்பிரதேசத்தின் ஃபைசாபாத் சென்றடையும்.

எந்தெந்த மாநிலங்கள்...
சுமார் 2,985 கி.மீ தூரம் கொண்ட வழித்தடத்தில் செல்லும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களை இணைக்கும். முதலில் பெங்களூர், அயோத்தி, வாரணாசி மற்றும் ஹரித்துவார் ஆகிய சுற்றுலா தலங்களை ராமேஸ்வரத்துடன் இணைக்கும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று கடந்த 2014-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் உத்தேசிக்கப்பட்டது.

வழக்கமான சேவை
இன்று தொடங்கப்பட்டது ஒரு பகுதி என்றாலும் ராமேஸ்வரம்- அயோத்தி இடையே வழக்கமான ரயில் சேவை ஃபைசாபாதில் ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதியும் , ராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 8-ஆம் தேதியும் தொடங்கும். இந்த விரைவு ரயில் தென்னிந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களான விஜயவாடா, ஜபல்பூர் மற்றும் அலகாபாத் ஆகியவற்றை இணைக்கும்.

என்னென்ன வசதிகள்
இந்த விரைவு ரயிலில் ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 8 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளும், 4 பொது வகுப்பு பெட்டிகளும், ஒரு சக்கர நாற்காலியும் இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள் கொண்ட பெட்டியும் இருக்கும். மேலும் இந்த ரயிலில் பயோ டாய்லெட் வசதியும் உள்ளது.

எங்கெங்கும் நிற்கும்
இரு புண்ணிய தலங்களுக்கிடையே செல்லும் ரயில், மானாமதுரை, திருச்சி, தஞ்சை, விழுப்புரம், சென்னை எழும்பூர், கூடூர், விஜயவாடா, வாராங்கல், பல்ஹாக்ஷா, நாக்பூர், இடார்சி, ஜபல்பூர், சாட்னா, அலகாபாத், ஜான்பூர் மற்றும் அயோத்தி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.












Click it and Unblock the Notifications