ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட வாய்ப்பே இல்லை: வழக்கறிஞர் ராமராஜ்
சென்னை: ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட வாய்ப்பில்லை என அவரது வழக்கறிஞர் ராமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் பொறியாளர் சுவாதி. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த வழக்குத் தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
அப்போது தனது கழுத்தை அறுத்துக் கொண்டு ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லையில் சிகிச்சை பெற்ற ராம்குமார், பின்னர் சென்னை கொண்டு வரப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை புழல் சிறையில் மின்கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட வாய்ப்பில்லை என அவரது சார்பில் வாதாடி வந்த வழக்கறிஞர் ராமராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், 'நேற்று தான் ராம்குமாரை சிறையில் சந்தித்ததாகவும், அப்போது அவர் நல்ல மனநிலையில் இருந்ததாகவும், விரைவில் தன்னை பெயிலில் எடுக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும்' தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை என்றும், விரைவில் உண்மைக் குற்றவாளிகளை அம்பலப் படுத்துவோம் என்றும் ராமராஜ் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.