சென்னை சில்க்ஸ்: ஏன் கிண்டல் செய்கிறீர்கள்.. "ராம்ராஜ்" உரிமையாளர் ஆதங்கம்!
சென்னை சில்க்ஸ் கட்டிட தீ விபத்தை கிண்டல் செய்யாமல் உழைப்பு விரயமாக பாருங்கள் என்று ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : சென்னை சில்க்ஸ் கட்டிட தீ விபத்தில் அடுத்தவரின் துன்பத்தை விளையாட்டாக எண்ணி கிண்டல் செய்ய வேண்டாம் என்று ராம்ராஜ் காட்டன் நிறுவன உரிமையாளர் நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அன்புடையீர்,
சென்னை சில்க்ஸில் தீ... இந்த செய்தியை வைத்து எவ்வளவோ விமரிசனங்கள். வாட்ஸ்ஆப்புகளில் வந்தவண்ணமே உள்ளது. மனம் வலிக்கிறது. இந்த விபத்தால் எவ்வளவு பாதிப்புகள். இதனால் நஷ்டம் என்பது கடை உரிமையாளருக்கு மட்டும் இல்லை.
முதலில் 7 தளங்களில் வேலை செய்தவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் அனைத்தும் போன நிலைமையில் அவர்களின் துன்பத்தினை நினைத்து பார்க்க வேண்டும் . ஒரு கடை உருவாக எத்தனை பேரின் உழைப்பு. ஆர்க்கிடெக்ட், கொத்தனார்கள்... அது மட்டுமில்லாமல் பொருட்சேதம்.. அப்பொருட்களை உருவாக்கிய நேரத்தின் மதிப்பு.. கடைதனில் வைத்திருந்த சரக்குகளின் பின் உள்ள மூலதனம் . ஒரு பட்டு புடவை தயார் செய்ய ஆகும் நேரம்.. செலவு.. ஒரு நகை செய்ய எவ்வளவு முயற்சி..
இழப்புகள் எத்தனை
அங்கே இருந்த கடைகள் பலவும் மூடப்பட்டன.. நடைபாதை கடை வியாபாரிகள் பலர்.. அன்றாடம் வருமானத்திலிருந்து கடன் கட்டி மீதி உள்ள வருமானத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். அவர்களின் நிலைமையை யோசியுங்கள். நேற்று ஒர் நாள் கடைகள் மூடப்பட்டதால் நமது அரசாங்கத்திற்கு எத்தனை வரி இழப்பு.
பெரிய முயற்சி
உணவகங்கள், தங்க நகை வியாபாரிகளுக்கு நேற்று ஒரு நாளின் நஷ்டம் தான் எத்தனை.. கடைக்கு சரக்குகளை இந்தியா முழுவதிலிருந்தும் சப்ளை செய்தவர்கள் அனைவரும் தங்கள் பணத்தினை பெற அதற்குண்டான ஆவணங்களை மீண்டும் தர வேண்டும்.. அது எத்தனை பெரிய முயற்சி..
மன உளைச்சல்
சென்னை சில்க்ஸ் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருப்பினும், அதன் உரிமையாளர்கள் எவ்வளவுதான் பணம் வைத்திருந்தாலும் அவர்களின் மனம் என்ன பாடுபடும். பணம் நிறைய இருந்தால் மன உளைச்சல் குறைந்து விடுமா என்ன.. ? மீண்டும் இதனை சீர் செய்ய எவ்வளவு முயற்சி , பணம் , உழைப்பு , மனிதர்கள் வேண்டும் .
உழைப்பு விரயம்
நமக்கென்ன.. எளிதாக கமெண்ட் அடித்து , அடுத்தவர்களின் கஷ்டத்தை , துன்பத்தை விளையாட்டாக எண்ணி விடுகின்றோம்.. ஒரு வாரத்தில் அதனை மறந்து அடுத்ததாக எதை பற்றி எழுதி கலாய்க்கலாம்.. விமர்சிக்கலாம்.. வியாபாரமாக்கலாம்.. என்று கடந்து விடுகின்றோம். ஜப்பான் போன்ற நாடுகளில் இத்தகைய ஒரு இழப்பினை, மனிதர்களின் உழைப்பின் இழப்பாக, விரயமாக கருதுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் உழைப்பை மதிக்கின்றார்கள்.. யாருடைய நஷ்டத்தினையும் நாட்டின் பொருளாக, தமது இழப்பாக கருதுகிறார்கள்.
சமுதாயத்திற்கே இழப்பு
நம்மால் பலரால் ஏன் இவ்வாறு நினைக்க முடிவதில்லை.. இதில் மனதை நிம்மதியுறச் செய்யும் ஒன்று, உயிர் பலியாகவில்லை என்பது தான் ஒரே ஆறுதலான விஷயம். பதிவுகளையும் விமர்சனங்களையும் தவிர்த்து கொஞ்சம் சிந்தித்து இந்த இழப்பு சென்னை சில்க்ஸ்க்கு மட்டுமில்லை இந்த நாட்டிற்கே, இந்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஆகும்.
பிரார்த்தனை
இந்த பேரிழப்பிலிருந்து சென்னை சில்க்ஸ் குடும்பத்தார் மீண்டு வர அவர்களுக்கு தேவையான மன வலிமையையும், அனைத்தையும் சமாளித்து புதுப்பொலிவுடன் வெளியில் வர மிகப்பெரும் ஆற்றலையும் அளிக்கவும் ஆண்டவனை வேண்டி என்றும் நாம் உடன் துணையிருப்போம்.....!!! இவ்வாறு நாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.