ரத சப்தமி: தன்வந்திரி பீடத்தில் உலக நன்மை தரும் 5 ஹோமங்கள்
ரத சப்தமியை முன்னிட்டு வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நன்மை தரும் 5 யாகங்கள் நடைபெற உள்ளன.
வேலூர்: வாலாஜா பேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி வருகிற ரதசப்தமி முன்னிட்டு புதன்கிழமையன்று உலக நன்மை தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது.
ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் நியாயமான கோரிக்கைகளை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார்.
மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

உலக நன்மை யாகங்கள்
1.ஆதித்யஹோமம்.2. ஸ்ரீராமஹோமம்.3.ஸ்ரீகாயத்ரி ஹோமம்.4.மஹா தன்வந்திரி ஹோமம்.5.குபேர லட்சுமி ஹோமம். ஆகிய ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்களாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு காலை கோபூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், சிறப்பு அர்ச்சனையும், ப்ரார்த்தனையும் நடைபெறவுள்ளது.

மதிப்பெண் பெற பிரார்த்தனை
பக்தர்கள் மற்றும் மாணவ மாணவிகள் இந்த யாகங்களில் பங்கு கொண்டு அதிக மதிப்பெண் பெறவும் மக்கள் பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, நோய்கள், நீங்கி ஆயுள் ஆரோக்யத்துடன் குபேர சம்பத்து பெற்று வாழ பிரார்திக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

முனிவரின் மனைவி
உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி. தை மாத வளர்பிறையில் ஏழாவது நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள் அந்த நேரத்தில் ஒரு அந்தணர் வந்து உணவு கேட்டார். கணவருக்கு பரிமாறிய பின்னர் மெதுவாக நடந்து அந்தணருக்கு உணவு எடுத்து வந்தாள் அதிதி. இதனால் கோபம் கொண்ட அந்தணர், தர்மத்தை புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தை பாதுகாப்பதற்காக மெதுவாக நடந்து வந்த அந்த கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபம் இட்டார்.

சூரிய புத்திரன்
அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி தன் கணவரிடம் நடந்தவற்றை விளக்கினாள். இதைக்கேட்ட காஷ்யப முனிவர், கவலைப்படாதே அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் நமக்கு கிடைப்பான் என்று வாக்களித்தார். அதன்படி ஒளி பொருந்திய புத்திரன் ஒருவன் அவர்களுக்கு கிடைத்தான். அவனே உலகைக் காக்கும் சூரியன். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

எருக்கம் இலை
இந்த விரதம் எளிமையானது. ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராடவேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

செல்வ வளம் தரும் விரதம்
ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம். ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்துக்கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுதலையடைவார்கள்.












Click it and Unblock the Notifications