ரேஷன் கடைகளில் "கோதுமைத் திணிப்பு"... விலையில்லா அரிசிக்குப் பதில்!
அனைத்து ரேஷன் கடைகளிலும் விலையில்லா அரிசிக்கு பதிலாக விலையில்லை கோதுமையை பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து பொருள்களும் வழங்கப்படும் என்றும் விலையில்லா அரிசிக்கு பதிலாக விலையில்லா கோதுமையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் ஆகிய பொருட்கள் மானியவிலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிறப்பு பொது வினியோக திட்டத்தை கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு சுமார் ரூ.1,158 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் 2016-17-ம் நிதி ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனத் தெரிகிறது.
இதனால் பருப்பு வகைகள், பாமாயில் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த பருப்பு வகைகள், பாமாயில் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த புகாருக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு திட்டமும், விலையில்லா அரிசி திட்டமும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. விலையில்லா அரிசிக்கு பதிலாக விலையில்லா கோதுமையை பெற்றுக் கொள்ளலாம்.
பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்களுக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தியபோதிலும், ரூ.1,800 கோடி மானியத்தை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. எனவே ரேஷன் பொருள்கள் நிறுத்தப்பட்டதாக கூறுவது வதந்தி என்றார் அவர்.