வாட்ஸ் அப்பில் ‘கொலை’ பற்றிய செய்திக்கு ‘தம்ஸ் அப்’ போட்டதற்காக டிஸ்மிஸ் செய்வதா? ஐகோர்ட் தீர்ப்பு!
மதுரை: வாட்ஸ்ப் அப் குழுவில் கொலை பற்றிய செய்திக்கு'தம்ஸ் அப்' எமோஜி பதிவிட்டதற்காக ரயில்வே பாதுகாப்பு படை வீரர் பணி நீக்கம் செய்யப்பட்டதை தனி நீதிபதி ரத்து செய்தது சரி என உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமாண்டர், காவலர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான செய்தி ரயில்வே பாதுகாப்பு படையின் அலுவலக வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டது. அதை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் நரேந்திர சவுகான், 'தம்ஸ் அப்' எமோஜியை பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து நரேந்திர சவுகான், காவல் அதிகாரி கொலைக்கு 'தம்ஸ் அப்' எமோட்டிகானை பதிவிட்டது உயர் அதிகாரி கொலையை கொண்டாடும் விதமாக இருப்பதாகக் கூறி, அவருக்கு மெமோ வழங்கப்பட்டது. தொடர்ந்து, துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு நரேந்திர சவுகான் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பணி நீக்கத்தை எதிர்த்து நரேந்திர சவுகான் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த தனி நீதிபதி, நரேந்திர சௌகான் பணி நீக்கத்தை ரத்து செய்து அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார். இதற்கு எதிராக ரயில்வே பாதுகாப்பு படை டிஜிபி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'தம்ஸ்அப்' குறியீடு என்பது 'ஓகே' என்பதன் மாற்று குறியீடு ஆகும். 'தம்ஸ்அப்' குறியீட்டை அதிகாரியின் கொடூர கொலையை கொண்டாடுவதற்கான குறியீடாக கருத முடியாது.
மேலும் கொலை செய்தியை மனுதாரர் அனுப்பவில்லை. வாட்ஸ்அப் குழுவில் வந்த தகவலை பார்த்து, அந்த தகவலை பார்த்துவிட்டதற்கான அத்தாட்சியாக 'தம்ஸ் அப்' குறியீட்டை பதிவிட்டுள்ளார். மனுதாரர் மீது வேறு எந்த குற்றச்சாட்டும் இல்லை. மனுதாரரின் விளக்கம் ஏற்புடையதாகவே இருக்கிறது.
எனவே, மனுதாரரின் பணி நீக்கத்தை ஏற்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications