செம்மரக்கடத்தல்: கரகாட்டக்காரி மோகனாம்பாள் அக்காள் மகன் சரண்
வேலூர்: செம்மரக்கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த மோகனாம்பாளின் அக்காள் மகன் சரவணன் நேற்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
வேலூர் வசந்தபுரம் பகுதியை சேர்ந்த கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள், காட்பாடி தாராபடவேடு கோவிந்தராஜ முதலியார் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அங்கு கடந்த மாதம் 25-ந் தேதி போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் மற்றும் 73 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன.
சரணடைந்த மோகனாம்பாள்
அதைத்தொடர்ந்து மோகனாம்பாள் தனது அக்காள் நிர்மலாவுடன் கடந்த 9ஆம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் இருவரும் இரண்டுநாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரையும் 48 மணிநேரம் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் மோகனாம்பாளின் அக்காள் நிர்மலாவின் மகன் சரவணனை போலீசார் தேடி வந்தனர்.
சரவணன் சரண்
இந்த நிலையில் காஞ்சீபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1-ல் மாஜிஸ்திரேட்டு மோனிகா முன்னிலையில் சரவணன் நேற்று காலை 11 மணிக்கு சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மோனிகா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சரவணனை வேலூர் ஜெயிலில் அடைக்க நேற்று மாலை வேலூருக்கு பலத்த போலீஸ் காவலுடன் அழைத்து வந்தனர்.
புழல் சிறையில் சரவணன்
வேலூர் ஜெயிலில் சரவணனின் கூட்டாளிகளும், தெரிந்தவர்களும் இருப்பதால் வேலூர் ஜெயிலில் அடைக்க கூடாது என்று போலீசார் முடிவு செய்தனர். வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வரப்பட்ட சரவணனை சென்னை புழல் ஜெயிலில் அடைக்க வேலூரில் இருந்து அழைத்து சென்றனர். பின்னர் சரவணனை புழல் ஜெயிலில் அடைத்தனர்.
ரூ.4 கோடி பணத்தின் மர்மம்
சரண் அடைந்த சரவணனை காட்பாடி போலீசார் விரைவில் காட்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால் தான் ரூ.4 கோடி பணம், 73 பவுன் நகை, செம்மரக்கட்டை கடத்தலுக்கு தொடர்பு உள்ளதா? உள்பட பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக பிரமுகரிடம் விசாரணை
கூட்டு சதி செய்ததாக கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபுவை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கும், சரவணனுக்கும் தொடர்பு உள்ளதா? செம்மரக்கட்டை கடத்தல்காரர்களுக்கும் பாபுவுடன் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.