பாஜகவை அசைத்துப் பார்க்கும் மாநிலக் கட்சிகள்... எதிரணிகள் ஒன்றுசேர்வதால் வெலவெலக்கும் நம்பிக்கை!
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் வெற்றிகளையே பார்த்து வந்த நிலையில் ஆட்சி முடிந்து அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் மாநிலக் கட்சிகள் பாஜகவிற்கு கடும் சவால்களை விடுக்கின்றன.
Recommended Video
சென்னை : 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வெற்றிகளையே ருசித்து வந்த நிலையில் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் மாநிலக்கட்சிகள் ஒவ்வொன்றாக எதிர் அணியுடன் கூட்டணி சேர்ந்து பாஜகவிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. 2019ம் ஆண்டில் பொதுத்தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இந்த சவால்கள் பாஜகவின் தொடர் வெற்றிக்கான நம்பிக்கையை அசைத்துப் பார்ப்பதாக உள்ளது.
2014 பொதுத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. லோக்சபாவில் பாஜகவிற்கு 282 எம்பிகள் இருந்தனர். ஆனால் இடைத்தேர்தல்களுக்குப் பின்னர் பாஜகவின் பலம் 272ஆக சரிந்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த உத்திரபிரதச மற்றும் பீஹார் லோக்சபா இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2019ல் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் லோக்சபா இடைத்தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வி பேரதிர்ச்சியை கொடுத்தது.
ஒன்று கூடிய மாநில எதிர்க்கட்சிகள்
உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக தோல்வியை தழுவ முக்கிய காரணமாக இருந்தது, எதிர் எதிர் கட்சிகளாக இருந்த சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கைகோர்த்து செயல்பட்டதே. மறைமுகமாக கூட்டணி வைத்து செயல்பட்டதை பாஜக பொருட்படுத்தாததால் தோல்வியை அறுவடை செய்திருக்கிறது.
கூட்டணியை தொடர திட்டம்
இடைத்தேர்தல் வெற்றியையடுத்து மாநிலக் கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் 2019 பொதுத்தேர்தலிலும் கூட்டணி அமைத்து செயல்படுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. பாஜகவிற்கு எதிராக மாநிலக் கட்சிகள் எடுத்து வைத்த முதல் அடி இதுவாக பார்க்கப்பட்டது.
வெளியேறிய தெலுங்கு தேசம்
இந்நிலையில் ஆந்திராவிற்கு தனி அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்குதேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. முதற்கட்டமாக 2 அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தது தெலுங்கு தேசம் எனினும் பாஜக சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் தயக்கம் காட்டியதால் இன்று அதிரடியாக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
மேலும் பாஜகவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தெலுங்குதேசம் கட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதே போன்று ஆந்திர எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி லோக்சபாவில் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
ஷாக் கொடுக்கும் மாநிலக் கட்சிகள்
மாநில நலனுக்காக ஒய்எஸ்அர் காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு தேசம் இணைந்து செயல்படக் கூடும் என்று தெரிகிறது. அடுத்தடுத்து பாஜகவிற்கு எதிராக மாநிலத்தில் எதிர்க்கட்சிகளாக உள்ளவை கைகோர்த்து செயல்படுவது பாஜகவின் 2019 தேர்தல் வெற்றிக்கான நம்பிக்கையை வெலவெலக்க வைத்துள்ளது.